சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் இருவரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது மேடையில் ராமராஜனுடன் இணைந்து நின்று பேசிய கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனர் கங்கை அமரன் ஒரு முக்கிய தகவலை ரசிகர்களுக்காக பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது இயக்குனர் கங்கை அமரன் கூறியதாவது, கரகாட்டக்காரன் படத்தில் நடந்த இந்த சம்பவம் யாருக்குமே தெரியாது. இப்போதுதான் நான் முதல் தடவையாக வெளியே சொல்கிறேன். இந்த படத்தில் ராமராஜன், கனகா நடித்த ஒரு பாடல் காட்சி பகல் முழுவதும் இடைவெளி விடாமல் படமாக்கப்பட்டது.
அப்புறம் இரவு நேரத்தில் அம்பிகா தோட்டத்தில் அந்த மாரியம்மா மாரியம்மா என்ற கிளைமாக்ஸ் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ராமராஜன் கனகா இருவரும் நாள் முழுவதும் கரகத்தை தலையில் வைத்த ஆடியதால் தலையே பாரமாகி வெடித்து விடும்போல் ஆகிவிட்டது. தலை வலிக்கிறது என்கின்றனர்.
ஆனால் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் அந்த பாடல் காட்சியில் அவர்கள் இருவரும் தீயில் இறங்கி வருவதற்காக குண்டம் எல்லாம் போட்டாகி விட்டது. அப்போது நடிகர் கவுண்டமணி வந்து, ஏம்பா நாள் முழுக்க கரகத்தை தலையில் வெச்சு ஆடியிருக்காங்க. தலை வலிக்குதுன்னு சொல்றாங்க. நாளைக்கு இந்த பாட்டை எடுத்துக்கலாமே என்றார்.
ஆனால் என்னால் சரி என்று சொல்ல முடியாத ஒரு சூழலில் அந்த பாட்டை அப்போதே எடுக்க வேண்டிய ஒரு நிலையில் இருந்தேன். ஆனால் அந்த பாடலை ராமராஜன் கனகா இருவரும் தலையில் கரகம் இல்லாமல் தான் ஆடி பாடி இருப்பார்கள். பாட்டின் முடிவில்தான் அந்த கரகத்தை எடுத்து தலையில் வைத்து ஆடுவார்கள். அதற்கேற்ப அண்ணன் இளையராஜா இசை அந்த இடத்தில் கை கொடுத்திருக்கும்.
அது தெய்வாதீனமாக நடந்த ஒரு விஷயம். நான் அதை திட்டமிட்டு எடுக்கவில்லை. தலைவலியால் அவதிப்பட்ட அவர்கள் பாடல் காட்சி முழுவதும் தலையில் கரகமின்றி ஆடிவிட்டு தீயில் இறங்கும்போது கரகத்துடன் இருப்பார்கள் என்று அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கங்கை அமரன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





