இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். காக்க காக்க வாரணம் ஆயிரம் வேட்டையாடு விளையாடு விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களை இயக்கியவர். அவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான படம் வெந்து தணிந்தது காடு.
நடிகர் சிம்பு, இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தரின் மகன். குழந்தை நட்சத்திரமாக டி ராஜேந்தர் படங்களில் அறிமுகமான அவர், காதல் அழிவதில்லை என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, ஆரம்பத்தில் இருந்தே படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்ட மறுக்கிறார். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுடன் அடிக்கடி பிரச்னை செய்வதாக அவர் மீது நிறைய புகார்கள் இருந்தன. படப்பிடிப்பு சரியாக வராமல் இருப்பது, படப்பிடிப்பு நேரங்களில் காணாமல் போவது என பல புகார்கள் இருந்துள்ளன.
ஆனால் சமீபகாலமாக படங்களில் நடிப்பதில் சிம்பு தீவிர ஆர்வம் காட்டுவதாகவும் படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்தில் வந்து ஒத்துழைப்பு தருவதாகவும், அவரது செயல்பாடுகளில் நிறைய மாற்றம் இருப்பதாகவும் திரையுலகம் சார்ந்த பலர் கூறுகின்றனர். சிம்பு தக்லைப் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்துள்ளார்.
அடுத்து அஸ்வத் மாரிமுத்து தேசிங்கு பெரியசாமி மற்றும் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படங்களில் சிம்பு நடிக்க உள்ளார். இதற்கிடையே இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது வெந்து தணிந்தது காடு படம் 2ம் பாகம் ஏன் உருவாகவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது, வெந்து தணிந்தது காடு 2ம் பாகத்துக்கான ஸ்கிரிப் பணிகள் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் அந்த படம் வெளிவந்த 25 நாட்களில் நடிகர் சிம்பு அந்த படத்தின் மீதான ஆர்வத்தை இழந்து விட்டார். அதனால் அந்த படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் 2ம் பாகம் உருவாகவில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





