இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது லேடி சூப்பர் ஸ்டார் இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவை தமிழ் சினிமாவுக்கு ஐயா படம் மூலம் கொண்டு வந்தவர் இயக்குனர் ஹரிதான். அவர்தான் ஐயா படத்தின் டைரக்டர்.
ஐயா படத்தை தொடர்ந்து, ஹரி இயக்கிய பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிங்கம், சிங்கம் 2 சிங்கம் 3 ஆகிய படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்பை பெற்றன. நடிகர் சூர்யாவுக்கும் இந்த படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹரி இயக்கத்தில் சாமி படம், சியான் விக்ரமுக்கு அவரது சினிமா பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. அதேபோல் நடிகை திரிஷாவுக்கு இந்த படம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்று தந்து அவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது.
ஹரி இயக்கத்தில் உருவான பல படங்கள் நல்ல கதையம்சத்துடன், குடும்பப் பங்கான கதைகளாகவும் இருப்பதால் பெண்களுக்கும் ஹரி படங்கள் மிகவும் பிடித்து விடுகின்றன. அவரது படத்தில் பெரும்பாலும் குடும்பக் கதைகளாகவும் இருக்கும். அதே நேரத்தில் காமெடி, சென்டிமென்ட், ஹீரோயிசம் ஆக்சன் என பலவித விஷயங்களையும் கலந்து தருவார் என்பதால் அவரது படங்கள் ஜன ரஞ்சகமாக இருக்கும். ரசிகர்களுக்கும் பிடித்த படங்களாக இருப்பதால் தொடர்ந்து அவர் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன.தாமிரபரணி, வேல், கோவில் என இப்படி பட படங்களை சொல்லலாம்.
இப்போது டைரக்டர் ஹரி, விஷால் நடிப்பில் ரத்னம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவி் மூத்த நடிகரான விஜயகுமார் மருமகன் என்பதும், மஞ்சுளாவின் மகள் ப்ரீத்தா விஜயகுமாரை திருமணம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய டைரக்டர் ஹரி, நான் சாமி 2 படத்தை இயக்கிய போது, அந்த படத்தில் ஒரு காட்சியில் சிங்கம் சூர்யாவும், சாமி விக்ரமும் போலீஸ் அதிகாரிகளாக நேரில் சந்திக்கும் ஒரு காட்சியை எடுக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அப்படி ஒரு காட்சி எடுக்க நான் திட்டமிட்டு இருந்த நிலையில் அவர்கள் இருவருமே பிஸியாக இருந்ததால் அது முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் அது எல்சியு வுக்கு முன்னதாக எச்சியுவாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





