சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியன்று வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது படமாக இது உருவாகி இருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த திரைப்படத்தின் கதையை எழுதியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. ராஷ்ட்ரிய ரைபெல்ஸ் படை பிரிவில் இருந்த முகுந்த் வரதராஜன், பயங்கரவாதிகளால் பிடிப்பட்டிருந்த பொது மக்களை மீட்கும் போது ஏற்பட்ட சண்டையில் வீர மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் அவரது வாழ்க்கையை திரைப்படமாக்க எண்ணிய ராஜ்குமார் பெரியசாமி அதற்கான திரைக்கதையை எழுதி, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து இன்று வெற்றி பெற்றிருக்கிறார். தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம், தற்போது வரை வார இறுதி நாட்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒருவர் சாய் பல்லவி தான். மிக தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் அசர வைத்திருந்தார். அதிலும் இறுதி காட்சியில் அவரது நடிப்பை பார்த்து பலரும் திரையரங்குகளில் கண்கலங்கி போயினர். தான் ஒரு சிறந்த நடிகை என்பதை இந்த திரைப்படத்தில் மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஸும் படத்தின் இசைக்கு உறுதுணையாக இருக்க, அமரன் திரைப்படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது. தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த திரைப்படம் அதிக வசூலை குவித்துள்ளது. அமரன் திரைப்படத்தை பார்த்து திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த மாதம் அமரன் திரைப்பட வெற்றி விழாவை, கமல்ஹாசன் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருப்பதாகவும் அதில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமரன் பட குழுவினரை அழைத்து பாராட்டி இருக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் இணைந்து அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.





