தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கிய ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். சந்தோஷ் சுப்பிரமணியம், டிக் டிக் டிக், தனி ஒருவன், போகன், பேராண்மை, வனமகன், எனக்கு 20 உனக்கு18 உள்ளிட்ட பல படங்களில் ஜெயம் ரவி நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. குறிப்பாக இறைவன், அகிலன், சைரன் 108 போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதற்கிடையே அவர் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு அவருக்கும் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவானது.
இதற்கு காரணம் ஜெயம் ரவியின் மாமியார் சின்னத்திரை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரித்த சில படங்களில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அகிலன், சைரன் 108, இறைவன் போன்ற படங்கள் தோல்வியடைந்த நிலையில் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன் ஜெயம் ரவிக்கும் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்பும் உருவானதாக தெரிகிறது.
காதல் திருமணம் செய்துக்கொண்டு இரு பிள்ளைகளுக்கு பெற்றோரான அவர்கள் பல ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்வதாக தகவல்கள் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அந்த தகவலை நடிகர் ஜெயம் ரவியின் அறிக்கை உறுதிப்படுத்தியது. திருமண வாழ்க்கையில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இது என்னுடைய சொந்த விஷயம். இது குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் தெளிவாக கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் அந்த அறிக்கையை வெளியிட்ட ஜெயம் ரவி இன்று தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது தனது பிறந்தநாளுக்கு முந்திய நாளில் தனது மனைவியுடன் திருமண பந்தத்தை முடித்துக் கொண்டு, அறிக்கையை வெளியிட்டு விட்டு அடுத்த நாள் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் நடிகர் ஜெயம் ரவி.
இந்நிலையில் பிரதர் என்ற ஜெயம் ரவி நடித்த படம், வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அதேபோல் உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யாமேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவர் தற்போது சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருவதால் அந்த படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவி படத்தை இயக்க உள்ளார் எனத் தெரிய வந்துள்ளது ஜெயம் ரவி நடிக்கும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவரே தயாரித்து இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





