இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சமுத்திரக்கனி. மிக நல்ல படைப்பாளியாக, நாடோடிகள் என்ற படத்தை தமிழ் சினிமாவுக்கு தந்தார். அடுத்து அவரது அப்பா படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நல்ல இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
கதாநாயகன் மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர நடிப்பு எதுவாக இருந்தாலும் சமுத்திரக்கனி தனித்து தெரிய காரணம், அவரது சிறப்பான படைப்பாற்றலும், நடிப்பு திறனும்தான். அந்த வகையில் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்போது சமுத்திரக்கனி அதிக படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டைரக்டர் சமுத்திரக்கனி கூறியதாவது, நான் ஏன் படங்களை இயக்குவதில்லை என என்னை சந்திக்கும் பலரும் கேட்கின்றனர். நல்ல படங்களை பார்க்க பலரும் விரும்புவதில்லை. அடுத்த சாட்டை என்று ஒரு படம் எடுத்தோம். தனியார் கல்லூரிகள், எப்படி மக்களிடம் பணம் கொள்ளையடிக்கின்றனர். மாணவர்களின் மனநிலை என்னவென்று காட்டியிருந்தோம்.
ஆனால் அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்குள் படாதபாடு பட்டுவிட்டோம். சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. நல்ல படங்களில் அருமை தெரியாதவர்கள், முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். இங்கே சரியான சிஸ்டம் இல்லை. எங்கள் படங்களை விற்பனை செய்ய நல்ல தளங்கள் இல்லை.
எங்கள் படங்களை வந்து பாருங்கள் என்று வியாபாரிகளிடம் கெஞ்ச வேண்டிய நிலை இருக்கிறது. அதை பார்க்கக் கூட அவர்கள் விரும்பவில்லை. இதனால்தான் மற்றமொழி படங்கள் கூட இப்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை விட நல்ல படங்கள் இன்னும் ரிலீஸ் கூட ஆகாமல் பெட்டியில் தூங்கிக்கொண்டு இருக்கிறது.
அதனால்தான் இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பதற்கு போய் விட்டேன்.நஷ்டமடைந்து நல்ல கருத்துகளை எப்படி சொல்வது, இங்கு எல்லாம் மாறினால்தான் மீண்டும் டைரக்ஷன் பக்கம் வருவேன், என்று கூறியிருக்கிறார் டைரக்டர் சமுத்திரக்கனி. இதே போல் பைரி படத்தை இயக்கிய டைரக்டரும், மஞ்சும்மெல் பாய்ஸ் படம் ரிலீஸ் காரணமாக, தனது படம் பைரி திரையிட்ட தியேட்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அந்த மலையாள படம் திரையிடப்பட்டதாக, கடந்த வாரத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.





