தமிழ் சினிமாவில் செம்பருத்தி புலன்விசாரணை கேப்டன் பிரபாகரன் மக்கள் ஆட்சி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஆர்கே செல்வமணி. பிரசாந்த் ஹீரோவாக நடித்த செம்பருத்தி படத்தில் நடிகை ரோஜாவை நாயகியாக அவர் அறிமுகப்படுத்தினார். பிறகு பல ஆண்டுகள் இருவரும் காதலித்த நிலையில் ஆர்கே செல்வமணி, ரோஜா திருமணம் செய்துக்கொண்டனர். இப்போது பெப்ஸி அமைப்பின் தலைவராக ஆர் கே செல்வமணி இருக்கிறார். ஆந்திரா அரசியல் களத்தில் ரோஜா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஆர்கே செல்வமணி, ரோஜா இருவரும் பங்கேற்றனர். அப்போது ஆர்கே செல்வமணி கூறியதாவது, நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்தோம். திருமணம் செய்துக்கொள்ளாவிட்டாலும் இவரும் மனதளவில் கணவன் மனைவியாக தான் வாழ்ந்தோம். அடிக்கடி சண்டை கூட போட்டுக்கொள்வோம்.
எங்கள் பெற்றோர் ரோஜா வீட்டுக்குச் செல்வார்கள். ரோஜாவின் பெற்றோர் என் வீட்டுக்கு வருவார்கள். கோவில், சுற்றுலா என்று அனைவரும் ஒன்றாக செல்வார்கள். குடும்ப உறவினர்களாக எங்கள் திருமணத்துக்கு முன்பே அவர்கள் நெருக்கமாக பழகி வந்தார்கள். அந்த அளவுக்கு எங்கள் காதலை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
என்னுடைய அப்பா ரோஜாவுக்கு மிகவும் சப்போர்ட் ஆக பேசுவார். அதே போல் ரோஜாவின் அம்மா எனக்கு சப்போர்ட் செய்வார். நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ, ஆனா எனக்கு மருமகன் செல்வமணிதான் என ரோஜாவின் பெற்றோரும், நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ, எனக்கு மருமகள் ரோஜா தான் என்று என் பெற்றோரும் எங்களிடமே பலமுறை கூறியிருக்கின்றனர்.
திருமணத்துக்கு முன்பே ஒரு மருத்துவ பரிசோதனை செய்த போது ரோஜாவுக்கு கர்ப்ப பையில் பிரச்னை இருப்பது தெரிந்தது. அதனால் திருமணம் ஆனாலும் அவர் கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை என்று டாக்டர் கூறிவிட்டார். இதை ரோஜாவிடமும், என் பெற்றோர், அவரது பெற்றோர் என யாரிடமும் நான் கூறவில்லை. எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ரோஜாவிடம் சொன்னால் அவர் தாங்க மாட்டார் என சொல்லவில்லை.
ஆனால் திருமணமான ஒரே ஆண்டில் ரோஜா கன்சீவ் ஆகி விட்டார். மகள் பிறந்தாா். அப்போதுதான் டாக்டர் ரோஜாவிடம் திருமணத்துக்கு முன்பு நான் மறைத்த ரகசியத்தை சொல்லி விட்டார். பிறகு எங்களுக்கு மகனும் பிறந்தார். அப்படி பிறந்த அந்த குழந்தைகளை நாங்கள் கடவுள் தந்த வரம் போல வளர்த்து வருகிறோம், என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.





