தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி, இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். காதல் காமெடி கலந்த படங்களை தொடர்ந்து தந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
சுந்தர் சி படங்கள் என்றாலே நிச்சயமாக 2 மணி நேரம் ஜாலியாக நேரத்தை கழிக்கும், ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வப்போது அரண்மனை சீரஸ் படங்கள் மூலம் திகில் திரில் படங்களையும் தந்து ரசிகர்களை மிரட்டி வருகிறார்.
இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் நடித்தும் உள்ள சுந்தர் சி படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என எல்லாவிதங்களிலும் வெற்றியை கொண்டாடி வரும் சுந்தர் சிக்கு இப்போது பொங்கலுக்கு வெளியான மதகஜ ராஜா படமும் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.
2013ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிலீஸாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக விஷால் சந்தானம் காமெடி கூட்டணி படத்துக்கு பெரிய பலத்தை தந்துள்ளது. வணங்கான் கேம் சேஞ்சர் படங்களை விட மதகஜ ராஜா படம் பார்த்த ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தருவதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சுந்தர் சி கூறுகையில், நான் சந்தானத்தை எந்தளவுக்கு மிஸ் பண்ணுகிறேன் என இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும். சந்தானம் பெரிய ஹீரோவாக இருக்கிறார். ஆனாலும் என்ன சின்ன வேண்டுகோள், விஜய் ஆண்டனி பற்றி அந்த விழாவில் நீங்கள் மீண்டும் படங்களுக்கு அவ்வப்போது இசையமைக்க வேண்டும் என்று சொன்னேன்.
அதே போல் சந்தானம் காமெடி கேரக்டரிலும் நடிக்க வேண்டும். இதை சொன்னால் அவர் கோவிச்சுக்குவார். இருந்தாலும் சொல்றேன். வாங்க, உங்களை நான் ரொம்பவும் மிஸ் பண்றேன். இந்த படம் பார்த்த ரசிகர்கள் சிரித்து மகிழ்வதுதான் எனக்கு மிகப்பெரிய பொங்கல் பரிசாக இருக்கிறது என்று இயக்குனர் சுந்தர் சி செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமாரும் உடன் இருந்தார்.





