சினிமா என்பது காட்சிகளின் கோர்வையாக உருவாக்கப்படுகிறது. ஒரு காட்சியுடன் மற்றொரு காட்சி தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில்தான், அடுத்தடுத்த காட்சிகளால் படம் கதையுடன் செல்லும். கதை வேறாகவும், காட்சிகள் வேறாகவும் எடுக்கப்படும் படங்கள், ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். பல படங்கள் அப்படிதான் சொதப்பி விடுகின்றன.
உதாரணமாக இந்தியன் 2 படம் பார்த்த ரசிகர்கள் பலரும் புலம்பியதற்கு முக்கிய காரணம், படத்தின் காட்சிகள் வெவ்வேறாக, சம்பந்தமின்றி வருகின்றன. படத்தின் கதையை புரிந்துக்கொள்ள முடியவில்லை. படத்தில் சில விஷங்கள் ஏன் நடக்கின்றன என்பது கூட தெரியவில்லை என்று விமர்சித்தனர். இந்த விமர்சனம்தான் இந்தியன் 2 படத்துக்கு பெரிய பின்னடைவாக மாறியது.
இப்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், மழை பிடிக்காத மனிதன் என்ற படம் ரிலீஸ் ஆகி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் துவக்கத்தில் ஒரு நிமிட காட்சி வருகிறது. ஆனால் அது எனது கவனத்துக்கே வராத காட்சி என்ற ஒரு தகவலை, இயக்குனர் விஜய் மில்டன் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சஸ்பென்ஸ், திரில்லர் படமாக வெளிவந்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தில், இயக்குனர் விஜய் மில்டன் அனுமதியே இல்லாமல், அப்படி ஒரு காட்சி வந்துள்ளதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், இந்த படத்தின் ஹீரோ யார், எங்கிருந்து வந்துள்ளான், ரவுடியா, அடியாளா, டாக்டரா என பல கேள்விகளை வைத்து, அந்த கேரக்டரை படத்தை உருவாக்கி இருந்தேன்.
ஆனால் படம் வெளியான பிறகு படத்தை பார்த்த போது எனக்கே பெரிய அதிர்ச்சியாகி விட்டது. படத்தின் துவக்கத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை வைத்துள்ளனர். சென்சார் பண்ணிய ஒரு படத்தில் எப்படி இதுபோன்ற ஒரு காட்சி வருகிறது. யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது எனத் தெரியவில்லை.
அதனால் ரசிகர்கள் படத்தில் வரும் அந்த ஒரு நிமிட காட்சிகளை ஏற்காமல், படத்தை பாருங்கள். அந்த ஒரு நிமிட காட்சியை அலட்சியப்படுத்தி விடுங்கள் என்பதை ஒரு கோரிக்கையாக உங்களுக்கு வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு படத்தின் இயக்குனரே, தனது படத்தின் ஒரு நிமிட காட்சி எனக்கே தெரியாமல் வந்துவிட்டதாக கூறுவதும், அதை தவிர்க்க வலியுறுத்துவதும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





