கடந்த 2022ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த ரசிகர்களுக்கு மெய் சிலிர்த்திருக்கிறது. பக்தியும் பரவசமும் கலந்த கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த ரசிகர்கள், அந்த படத்தை கொண்டாடினர். குறிப்பாக அந்த வினோத கூவல் சத்தம் ரசிகர்களால் மறக்க முடியாதது.
இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் காந்தாரா படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகன் ரிஷப் ஷெட்டியை தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேரில் அழைத்து பாராட்டினார். அதுவரை தமிழ் சினிமாவில் அறிமுகமே இல்லாத நிலையிலும் காந்தாரா படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கன்னட மொழியில் வெளியாகி அபார வெற்றியை பெற்ற காந்தாரா படம் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. இப்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைக்களத்தில் உருவாகிறது. இந்த படம் 800ம் ஆண்டுகளில் நடந்த சம்பவமாக ராஜா காலத்தில் உருவாகி வருகிறது. மைசூருவில் மிகப்பெரிய அரண்மனை செட் அமைத்து ஷூட்டிங் நடந்துள்ளது.
இந்நிலையில் காந்தாரா சாப்டர் 1 படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி வெளியீடு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காந்தி ஜெயந்தி தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும். அக்டோபர் 2ம் தேதி என ஏற்கனவே அறிவித்த ரிலீஸ் தேதி தள்ளி போவதாகவும் வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இதனை காந்தாரா படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் ரிஷப் ஷெட்டி தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி சரியாக நடந்து வருகிறது. எங்களை நம்புங்கள். வதந்திகளை நம்பாதீர்கள். சொன்னபடி அக்டோபர் 2ம் தேதி காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.





