தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது முதல் திரைப்படமாக த்ரிஷா இல்லனா நயன்தாரா வெளிவந்தது. முழுக்க முழுக்க இரட்டை அர்த்தத்துடன், ஆபாச காட்சிகள் நிறைந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படம் வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் அதன் நோக்கத்தை அடைந்தது. ஆம் படத்தை பலர் கழுவி ஊற்றினாலும் இளைஞர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு இருந்ததால் வசூல் ரீதியாக திரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றது.
படத்தில் இரட்டை அர்த்த வசனமும் அருவருப்பான காட்சிகளும் இருந்ததால் அப்போதே சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர்களில் ஒருவராக மாறினார் ஆதிக் ரவிச்சந்திரன். இதன் பிறகு அவர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை இயக்கினார். இது என்ன கதை என்பதை ரசிகர்களுக்கு கடைசி வரை தெரியவில்லை.
அந்த அளவுக்கு மிக மோசமான விமர்சனத்தை அந்த திரைப்படம் சந்தித்தது. இதன் படுதோல்விக்கு காரணம் சிம்பு தான் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆதங்கப்பட்டார். சிம்பு படப்பிடிப்புக்கே வராததன் காரணமே இதன் விளைவு என்றும் அவர் தெரிவித்தார். இதன்பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் பகிரா என்னும் திரைப்படத்தை எடுத்து மீண்டும் கெட்ட பெயரை வாங்கினார்.
கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் தான் ஆதிக்கிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் தான் அவர் அஜித்துடன் இணைந்து இருக்கிறார். தன்னை எப்போதுமே அஜித் ரசிகராக காட்டிக் கொள்ளும் அவருக்கு, குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் மூன்று கெட்டப்புகளில் அஜித் நடிக்கிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதில் இதுவரை இல்லாத அஜித்தை ரசிகர்களால் பார்க்க முடிந்தது. முதலில் தோற்றமே மிக வித்தியாசமாக இருந்தது. கூலர்ஸ் அணிந்து விட்டு, கலர் சட்டை, உடல் முழுவதும் டாட்டூ என ஒரு வில்லத்தனமாக அஜித் காட்சியளிக்கிறார். மேசையில் துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருக்க, ஒரு அஜித் நடு விரலை காட்டிக் கொண்டிருப்பது போல் இருப்பது கவனம் பெற்றுள்ளது. வாக்கு செலுத்தினால் கூட ஒரு விரலைக் காட்டாமல் மொத்த கையையும் நீட்டும் அஜித் இந்த திரைப்படத்திற்காக துணிந்து நடுநிலை நீட்டி இருக்கிறார். இதனை பார்க்கும் போதே அவர் மொத்தமாக ஆதிக் ரவிச்சந்திரனிடம் தன்னை ஒப்படைத்து விட்டார் என்று தெரிகிறது. மங்காத்தா விநாயக் மகாதேவன் போல ஒரு கதாபாத்திரத்தை அஜித்திடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.





