லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 3. கடந்த 1996ம் ஆண்டில் இந்தியன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் ஷங்கர், மீண்டும் இந்தியன் 2 படத்தை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினார். பல்வேறு தடைகளுக்கு பின் படப்பிடிப்பு நடந்தது.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போதே இந்தியன் 3 படத்துக்கான கண்டென்டும் ஷங்கருக்கு கிடைத்து விட்டதால் இந்தியன் 2 இந்தியன் 3 என 2 பாகங்களையும் ஷங்கர் ஒரே நேரத்தில் இயக்கினார். இதில் இந்தியன் 2 வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தியன் 2 படத்தில் ஷங்கர் இயக்கம் மிகவும் சொதப்பலாக அமைந்து விட்டது.
இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த சூழலில் இந்தியன் 3 படத்தில் சில மாற்றங்களை திருத்தங்களை செய்து இயக்குனர் ஷங்கர் ரி ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் பல மாதங்களாக படப்பிடிப்பு துவங்காமல் தாமதம் நீடிக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், சென்னைக்கு வந்தார். ஓஎம் ஆரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை இயக்குனர் ஷங்கர் நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது இந்தியன் 3 படம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தியன் 3 படம் எடுத்த வரையில் பார்த்துள்ள தயாரிப்பாளர் சுபாஸ்கரன், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஷங்கருடன் பேசியிருக்கிறார்.
அப்போது இயக்குனர் ஷங்கர், இந்தியன் 3 படம் இன்னும் 30 நாட்கள் வரை ஷூட்டிங் நடத்தப்பட வேண்டியுள்ளது. படத்தின் மேக்கிங் செலவு ரூ. 25 கோடி வரை ஆகும் என்று கூறியிருக்கிறார். இதுதவிர கமல் மற்றும் ஷங்கர் ஆகியோரது சம்பளமும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் எப்படியும் இன்னும் 60 கோடி ரூபாய் முதல் ரூ. 75 கோடி ரூபாய் வரை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது.
இந்த சந்திப்பின் போது எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதுகுறித்து தனது நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் என்று தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குனர் ஷங்கரிடம் கூறியிருக்கிறார். அதனால் இந்தியன் 3 படம் அடுத்தகட்ட ஷூட்டிங் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. கமல் இப்போது தக்லைஃப் படம் பிரமோ பணிகளில் தீவிரமாக இருப்பதால் இந்தியன் 3 படப்பிடிப்பு இன்னும் தள்ளிப்போகுமா என்ற சந்தகேமும் நீடிக்கிறது.





