சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகர் போண்டாமணி, கடந்த டிசம்பர் மாதத்தில் காலமானார். அதாவது நடிகர் விஜயகாந்த் இறப்பதற்கு முன்புதான் அவரும் மறைந்தார். வாடகை வீடு, நோயாளி மனைவி, கல்லூரியில் படிக்கும் மகள் என ஒரு வறுமையான சூழலில்தான் அவரது குடும்பம் உள்ளது.
போண்டாமணி மறைந்த போது, அவருக்கு நடிகர் சங்கம் தரப்பில் இருந்து எந்தவிதமான உதவிகளும் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்தது. அதே போல் பல படங்களில் அவர், நடிகர் வடிவேலுவுடன்தான் நடித்தார். ஆனால், போண்டாமணி மறைவுக்கு வடிவேலு நேரில் வரவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை.
இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய காமெடி நடிகர் பெஞ்சமின் கூறியதாவது, சின்ன நடிகர், காமெடி நடிகர், சீரியல் நடிகர் என்ற பாகுபாடு எல்லாம் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி போன்றவர்கள் பார்க்க மாட்டார்கள். இப்படி யார் மறைந்தாலும் முதல் ஆளாக வேட்டியை கட்டிக்கொண்டு வந்து நின்று உதவுவார்கள்.
அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாமல், குடும்பத்தில் ஏதேனும் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களை அணுகினால், நடிகர் சங்கத்தில் இருந்து தராவிட்டாலும் அவர்களது சொந்த பணத்தில் இருந்து 10 ஆயிரம், 30 ஆயிரம் என எடுத்துக்கொண்டு உதவுவார்கள்.
நடிகர் சங்கத்தில் மூன்று முறை செயற்குழு உறுப்பினர்களாக நான் இருந்ததால், அவர்களிடம் பழகும் வாய்ப்பை நான் பெற்றேன். அவர்களது பணி, நிர்வாகம் எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்த வகையில் விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி போன்றவர்கள், நடிகர்கள் மீது அதிக அக்கறை காட்டினர்.
ஆனால் போண்டாமணி இறந்த போது, இறுதிச்சடங்கு செய்ய பிரேமலதா 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால் சிலர், ஒரு லட்சம் ரூபாய் தந்ததாகவும், பிறகு 12 லட்சம் ரூபாய் செக் கொடுத்து போண்டாமணியில் அனைத்து கடன்களையும் அடைத்துவிட்டதாகவும் வதந்திகளை பரப்பி விட்டனர். அது எதுவுமே உண்மையல்ல. ஆனால் அந்த குடும்பத்துக்கு உதவுவதாக சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன், பிரேமலதா உறுதியளித்துள்ளனர். வேல்ஸ் கல்லூரி நிறுவனர் ஐசரி கணேஷ், போண்டாமணி மகளின் 3 ஆண்டுகால கல்லூரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். உண்மையில் அவர் மட்டுமே போண்டாமணி குடும்பத்துக்கு உதவிய பண்பாளர் என, பெஞ்சமின் அதில் கூறியுள்ளார்.





