தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியை குவித்த திரைப்படம் என்றால் அது நிச்சயம் அமரனாகத்தான் இருக்கும். சிவகார்த்திகேயனுக்கும் சரி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் சரி தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கும் சரி மிகப்பெரிய வெற்றியையும் லாபத்தையும் கொடுத்திருக்கிறது இந்த அமரன்.
தீபாவளிக்கு வெளியாகி மூன்று வாரங்களை தாண்டியும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அமரன் ஓடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி. ஒவ்வொரு காட்சியிலும் அவர் தனது நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு காண்போரை கண்கலங்க வைத்து விட்டது. இதற்காகவே திரையரங்குகளில் சாரை சாரையாக படையெடுக்கின்றனர். மிக முக்கியமாக குடும்பங்கள் அமரன் திரைப்படத்திற்கு படையெடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
இதற்கு முன்பு சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய திரைப்படங்களாக, டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் அமைந்தன. மாவீரன் திரைப்படம் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது. ஆனால் தற்போது அமரன் அதை எல்லாம் தாண்டி வசூலில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல் குவித்து சிவகார்த்திகேயன் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார். அது மட்டுமல்ல அமரன் திரைப்படத்தின் மூலம் அவரது மார்க்கெட்டும் பயங்கரமாக எகிறி இருக்கிறது. இன்னும் அமரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் சென்று கொண்டே இருப்பதால், அதன் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஆந்திராவிலும் அமரனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது தான்.
கிட்டத்தட்ட அங்கு மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது இந்த அமரன் திரைப்படம். இதனால் தயாரிப்பாளர் கமல்ஹாசன் குஷியில் இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் இருந்து வரும் அவர், தமிழ்நாடு திரும்பியதும் அமரன் திரைப்படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாகக் கொண்டாட இருக்கிறார். இதற்காக நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டு இருக்கிறாராம். அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





