தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பல பரிமாணங்களில் தனுஷ் வெற்றி பெற்று வருகின்றனர். அவரது இயக்கத்தில் உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இட்லிகடை ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
ஏற்கனவே அவரது இயக்கத்தில் வெளியான ப பாண்டி ராயன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. மேலும் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படமும் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். 2 பாகங்களாக இந்த படம் உருவாகிறது. கடந்தாண்டில் இந்த படத்தின் அறிமுக துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் இளையராஜா தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆனால் பல மாதங்களாகியும் இளையராஜா பயோபிக் படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிகர் தனுஷ் கமிட் ஆகி வருகிறார். இப்போது அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் இப்போது இளையராஜா பயோபிக் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. 2 பாகங்களாக உருவாகும் இந்த படத்தை கன்னெக்ட் மீடியா நிறுவனம் மற்றும் மெர்க்குரி நிறுவனம் என 2 தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க முதலில் முடிவாகி இருந்தது. ஆனால் படத்தை தயாரிப்பதில் தயாரிப்பு நிறுவனங்களுக்குள் முரண்பாடு இருந்துள்ளது.
இந்நிலையில் இளையராஜா பயோபிக் படத்தை தயாரிப்பதில் இருந்து மெர்க்குரி நிறுவனம் விலகி விட்டதாகவும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் கன்னெக்ட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து இளையராஜா படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனம் என்பதால் இளையராஜா பயோபிக் படம் உருவாவது உறுதி என்ற உற்சாகத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.





