லியோ திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் உடன் இணைந்து கூலி படத்தை இயக்கி வருகிறார். தங்கக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கம்போல் அனிருத் தான் இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
இதில் ரஜினிகாந்துக்கு தேவா என்னும் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஜெயிலர் வேட்டையன் திரைப்படங்களைத் தொடர்ந்து கூலி படத்திலும் பிற மாநில நடிகர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். நாகர்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட சூட்டிங்கில்தான், அமீர்கான் நடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
ஏற்கனவே கைதி மற்றும் விக்ரம் திரைப்படத்தில் அவர், எல் சி யூ கான்செப்ட்டை சிறப்பாக பயன்படுத்தி இருந்தார். லியோவில் கடமைக்காக எல் சி யு வை வைத்தது போல் இருந்ததாக பலரும் கூறினார்கள். கூலியில் அது இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்த இயக்குனர், தற்போது கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் அதனை தொடர இருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனேகமாக ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முடித்துவிட்டு, அடுத்ததாக அவர் இயக்க இருக்கும் நடிகர் யார் என்பது தான் இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த பட்டியலின் முதலாவதாக இருப்பவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். மைத்ரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்க இருப்பதாக கூறுகிறார்கள்.
அதேசமயம் இந்தப் ப்ராஜெக்ட் தாமதமானால் அவர் தனுசுடன் கைகோர்க்க திட்டமிட்டு இருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக பேசப்படுகிறது. அதேசமயம் சிவகார்த்திகேயனுடன் லோகேஷ் கனகராஜ் இணைய இருப்பதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





