தமிழ் சினிமாவில் நடிகை ரேவதி சிறந்த நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். பல நடிகைகள் தங்களது நேர்காணலில், ரேவதி போன்ற ஒரு நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியவர். ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜன் இயக்கத்தில் அறிமுகமான ரேவதி, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்.
நடிகை ரேவதி இப்போது இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சொர்ணமுகி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கேஎஸ் அதியமான். வாழ்வியல், உணர்வியல் சார்ந்த படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமைக்கு உரியவர்.
இப்போது கேஎஸ் அதியமான் இயக்கும் இந்த படத்தில் நடிகை ரேவதி கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்ட பல தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில், ஒரு தயாரிப்பாளர் மட்டுமே முன்வந்து படத்தை தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க மாதம்பட்டி ரங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த படத்தில் நடித்துவரும் மாதம்பட்டி ரங்கராஜ், வளர்ந்து வரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் கதை, திரைக்கதை பார்த்து வியந்து போன அவர், இந்த படத்தை இந்த தயாரிப்பாளர் தயாரிப்பதற்கு பதிலாக வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரித்தால் நன்றாக இருக்குமே என முடிவு செய்திருக்கிறார்.
இந்த படத்தை தயாரிக்குமாறு வேறு சில தயாரிப்பாளர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த புராஜெக்ட் பற்றி அவர்களிடம் பேசிய அவர், இந்த படத்தில் நான்தான் ஹீரோ, ரேவதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நீங்கள் இந்த படத்தை தயாரியுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த தகவல் எப்படியோ, அந்த படத்தை இப்போது தயாரித்து வரும் தயாரிப்பாளரின் கவனத்துக்கு போயிருக்கிறது. இந்த சப்ஜெக்ட்டை தேர்வு செய்தது நான், படத்தை தயாரித்தது நான். எனக்கே அல்வா கொடுக்க பார்கிறாரா என மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆதங்கப்பட்ட அந்த தயாரிப்பாளர் இப்போது, அந்த படத்தில் நாயகனாக நடிக்க மாதம்பட்டி ரங்கராஜை தூக்கி விட்டு, விதார்த்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





