தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே பெரிய வெற்றிப் படம் எதுவும் இல்லை. குறிப்பாக திருமணத்துக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான எந்த தமிழ் படமும் பெரிய வரவேற்பை வசூலை குவிக்கவில்லை.
இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா நடித்த ஹாய் படமும் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேஜிஎஃப் நாயகன் யஷ் நடித்த டாக்ஸிக் படமும் பெரிய அளவில் பிளாப் தந்து விட்டது. தமிழ் சினிமாவில் இளம் நாயகிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்து விட்டது. அவர்கள் நடிக்கும் படங்களும் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் நம்பர் 1 இடத்தை எப்படியும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் நடிகை நயன்தாரா தன்னை மாற்றிக்கொண்டு வருகிறார். படப்பிடிப்பு தளங்களில் கண்டிஷன்களை போடாமல் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் நேரில் வரத் துவங்கியிருக்கிறார். ஏனெனில் இமேஜ் இருக்கும் வரை தான் ரூ. 10 கோடி ரூ. 12 கோடி என சம்பளம் வாங்க முடியும்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் இப்போது நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு படம் சுந்தர் சி இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் 2 படம்தான். இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருக்கிறார். மேலும் சுந்தர் சி ரெஜினா கசாண்ட்ரா சினேகா இனியா ஊர்வசி துனியா விஜய் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
மஹாசக்தியின் எழுச்சி என்ற பெயரில் நேற்று மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியானது. புராண கால பின்னணியில் இன்றைய காலகட்டத்தை இணைக்கும் ஒரு கோணத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. மக்களின் இறை நம்பிக்கையை பிரதிபலிக்கும் ஒரு படமாக தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியாக அம்மனாக நயன்தாரா டீசரில் வருகிறார்.
ஆனால் இந்த டீசரை பார்க்கும் போது இது ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகமா, அல்லது சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படங்களின் 5ம் பாகமா என்ற குழப்பமும் சந்தேகமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அரண்மனை படத்தின் டீசர் போல தான் இது பயமுறுத்துகிறது. வரும் நவம்பர் 6ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.





