வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். வழக்கம்போல் அனிருத் தான் இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவது அதன் அறிவிப்பு வீடியோவிலேயே உறுதியாகிவிட்டது. ஜெயிலர் வேட்டையன் திரைப்படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் பிற மாநிலத்திலிருந்து முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
அது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் அண்மையில் வெளியானது. மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்ட, சௌபின் சபீர் இந்தப் படத்தில் தயா எனும் கதாபாத்திரத்தில் வருகிறார். சத்யராஜிற்கு, ராஜசேகர் என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் ப்ரீத்தி எனும் கதாபாத்திரத்தில் வருவதாக லோகேஷ் கனகராஜ் அண்மையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். மிக முக்கியமாக நாகர்ஜுனா படத்தில் இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அவருக்கு சைமன் என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவும் இடம்பெற்று இருக்கிறார். இறுதியாக ரஜினிகாந்தின் கதாபாத்திரமும் வெளியிடப்பட்டது. தேவா என்னும் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். துறைமுகத்தில் தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்காக படக்குழுவினர் விசாகப்பட்டினத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்.
அங்கு படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் வெள்ளை கோட் அணிந்தபடி, அடர்ந்த தாடியுடன் நாகர்ஜூனா காட்சி இருக்கிறார். துறைமுக வளாகத்தில் அவர் சுத்தியலை கொண்டு ஒருவரை தாக்குவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் அவர் வில்லனாக நடித்திருப்பது உறுதியாக இருப்பதாக பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இரண்டு மாதமாக பலரது கடின உழைப்பும் வீணாகி விட்டதாக வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். தயவு செய்து இந்த வீடியோவை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.





