தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் தம்பி ராமையா. துவக்கத்தில் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் பிறகு ஹீரோக்களுடன் காமெடி செய்தார். குறிப்பாக கும்கி, மைனா, கொம்பன், அப்பா உள்ளிட்ட பல படங்களில் தம்பி ராமையா காமெடி ரசிகர்களை ரசிக்க வைத்தது. வடிவேலு நாயகனாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை டைரக்ட் செய்தவரும் தம்பி ராமையா தான்.
தம்பி ராமையா மகன் நடிகர் உமாபதிக்கும், ஆக்ஷன்கிங் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடந்தது. மேலும் உமாபதி இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடித்துள்ள ராஜாகிளி என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் தம்பி ராமையா, சில விஷயங்களை மனம் திறந்து பேசியிருப்பது, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தம்பி ராமையா கூறுகையில், சின்ன வயதில் இருந்தே எனக்கு அம்மா மீது அதிக அன்பும், பாசமும் வைத்திருப்பேன். எப்போதும் அம்மா பிள்ளையாக நான் அவர் மீது அதிகமான பிரியத்துடன் நடந்துக்கொள்வேன்.
என் அம்மா மூச்சு காற்று உள்ளவரை தான் நான் வாழ வேண்டும். என் அம்மா இறந்தால் நானும் இறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஒருநாள் என் அம்மா இறந்துவிட்டார். நான் அதிர்ந்து போய்விட்டேன்.அப்போது நானும் இறந்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். தற்கொலை செய்து கொள்ள்லாம் என்ற முடிவும் செய்துவிட்டேன். ஆனால் அப்போது எனக்கு பல குழப்பங்கள் இருந்தது.
ஆனால் என் மகளுக்கு மட்டுமே அப்போது திருமணம் ஆகியிருந்தது. மகனுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் என் பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் அவர்களை பற்றி அதிக கவலை இல்லை. ஆனால் நான் அப்போது 4 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அந்த தயாரிப்பாளர்கள் பாதிப்பார்களே என்ற கவலை வந்தது. ஆனாலும் அம்மா இறந்தவுடன் மகன் நானும் இறந்துவிட்டால் அது பாசத்தின் வெளிப்பாடாக எனக்கு பெருமைதான் என்றும் நினைத்தேன்.
அப்போது நடிகை நயன்தாரா போன் செய்தார். டோரா என்ற படத்தில் அவருடன் நடிக்க அப்போது ஒப்பந்தமாகி இருந்தேன். அப்போது நயன்தாரா எனக்கு யதார்த்தத்தை புரிய வைத்தார். அவர் பேசிய பிறகுதான் எனக்கு தெளிவு கிடைத்தது. தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன். அவரால்தான் என் மகனின் திருமணத்தை என்னால் பார்க்க முடிந்தது, என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.





