ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் நெல்சன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியது பின்வருமாறு,
இது என்னுடைய நான்காவது படம். இதற்கு முன் நான் எடுத்த படங்களுக்கு ஆடியோ லான்ச் விழா நடந்தது கிடையாது. இதுதான் என்னுடைய முதல் ஆடியோ லான்ச்.
என்னுடைய வாழ்க்கையில் நான் யாருக்கும் நன்றி கூறியது கிடையாது. இந்த தருணத்தை பயன்படுத்தி நான் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயிலர் படத்தை பொறுத்தவரை இதில் ஏராளமான நடிகர்கள் உள்ளனர். இதில் ஒழுக்கம் மற்றும் அனுபவம் மிக்க நடிகர்களான மோகன்லால் சிவராஜ்குமார் போன்றவர்கள் ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் ஒழுக்கமே இல்லாத நடிகர்களான VTV கணேஷ் போன்றோரும் இருந்தனர். ஆனால் இந்த இரு கலவைகளையும் கொண்ட நடிகர்களை ஒருங்கிணைக்க எனக்கு உதவியாக இருந்தது ரஜினிகாந்த் சார் தான். அதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுநாள் வரை தலைவர் என்னை புகழும்போது அவர் கிண்டலாக சொல்கிறாரா இல்லை உண்மையாக சொல்கிறாரா என்பது எனக்கு தெரிந்ததே கிடையாது. சிவராஜ் குமாரை பொறுத்தவரை அவரை நான் ஏற்கனவே பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துள்ளேன். அவர் மிகவும் நல்ல மனிதர்.
நான் டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய போது புனித் ராஜ்குமார் என்னை அழைத்து அந்த படங்களுக்காக என்னை பாராட்டி இருந்தார். அதே சமயம் ஐந்து நிமிடம் ரோல் உன்னுடைய படத்தில் இருந்தாலும் நான் நடிக்க தயார் என்று அவர் கூறியிருந்தார்.
என் படத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் என் கதை பிடித்திருந்ததா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எல்லோரும் அதில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் ரஜினிகாந்த் சார் மட்டும் தான். ஜெயிலர் படத்தின் பாடல்கள் குறித்து பலரும் பேசுகின்றனர். அதேபோல் சூப்பர் சுப்பு குறித்தும் பேச தொடங்கியுள்ளனர். நான் சூப்பர் சுப்புவை பாடல் வெளியான பிறகு தான் சந்தித்தேன். அனிருத்திடம் ரஜினி ரசிகர் மன்றத்தில் யாரையாவது அழைத்து பாடலை எழுத சொன்னீர்களா என்று கேட்டிருந்தேன். அந்த அளவிற்கு அவர் அருமையாக எழுதியிருந்தார்.
இதுவரை நான் சினிமாவில் சாதித்ததில் 50 சதவீதம் அனிருத்தையே சாரும். அனிருத்தால் தான் நான் இன்று இங்கு நிற்கிறேன். அவர் தொடர்ச்சியாக என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். நான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிறைய படங்களை இயக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அதேபோல் அவர்களும் நினைக்க வேண்டும். அதற்கேற்றார் போல் என்னுடைய படங்கள் இருக்க வேண்டும். கலாநிதி மாறன் சாரை கண்டாலே எனக்கு பயம். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வந்தவன். அவர் தொலைக்காட்சியில் ஒரு சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார்.
ஜெயிலர் படத்தை துவங்கும் போது நான் சரியான ஒரு மனநிலையில் இல்லை. ஜெய்லர் படத்தை நான் இயக்குவேனா என்பது கூட எனக்கு தெரியாது. நான் தலைவரிடம், நீங்கள் என்னை முழுமையாக நம்பிய பிறகு நாம் படம் செய்வோம் என்று கூட கூறினேன் . ஆனால் அவர் என்னை அப்போதே முழுமையாக நம்பினார். ஜெயிலர் படப்பிடிப்பில் ஒரே ஒரு நாள் கூட அவர் எதிர்மறையாக நடந்து கொண்டது கிடையாது. அவர் அனைவருக்கும் அவ்வளவு மரியாதை கொடுப்பார். என்னைக் கூட அவர் சார் என்று தான் அழைப்பார். அப்படி அவர் அழைத்தது எனக்கு உண்மையில் ஆச்சரியத்தை கொடுத்தது. இப்படியாக நெல்சன் பேசியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: மொத இதை பண்ணுங்க அப்புறம் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுங்க… ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் விஜய்யை வம்பிழுக்கும் விதமாக பேசிய கலாநிதி மாறன்





