பாகுபலி படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தின் மூலம் இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமா வரையிலும் புகழ்பெற்றவர் நடிகர் பிரபாஸ். அதற்கு முன்பு பாலிவுட்டில் வெளியான இரண்டு மூன்று திரைப்படங்களை ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற நிலையை ஈட்டி இருக்க, தென்னிந்தியாவிலிருந்து வந்த ஒரு திரைப்படம் அந்த சாதனைகளை எல்லாம் தவிடு பொடி ஆக்கியது.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பாகுபலி திரைப்படம் கொண்டாடப்பட்டதால், பிரபாஸ் சூப்பர் ஹீரோவானார். ஆனால் இங்கு இருந்து தான் அவரது திரையுலக பயணம் திசை திரும்ப ஆரம்பித்தது என்று கூறலாம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சாஹோ படத்தில் பிரபாஸ் நடித்தார். மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
பாகுபலி கொடுத்த தாக்கத்தால் பிரபாஸின் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் அது எல்லாம் தவிடு பொடி ஆக்கியது சாஹோ திரைப்படம். காட்சிக்கு காட்சி, திரைக்கதையில் ஒரு இடம் கூட ஒட்டாததால் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது சாஹோ. இதனைத் தொடர்ந்து அடுத்த திரைப்படமாக, ராதே ஷியாம் பிரபாஸ் நடிப்பில் வெளியானது.
காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இந்தக் கதைக்கு ஏன் இவ்வளவு பிரமாண்ட செலவு என்று கேள்வி எழுப்பிய ரசிகர்கள், படத்திற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதன் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஆதி புருஷ் திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
அத்தனை பொருட் செலவில் தயாரான இந்த திரைப்படம் கடைசியில் சமூக வலைதளத்தில் ட்ரோல் மெட்டீரியலாக ஆனது. பிரபாஸின் கெட்டப்பை பார்த்து கிண்டல் அடிக்காத அவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவு மோசமான விமர்சனங்களை சம்பாதித்தது ஆதிபுருஷ் திரைப்படம். இந்த நிலையில் தற்போது, அவர் நடிப்பில் சலார் திரைப்படம் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து அடுத்த பிரமாண்ட திரைப்படமான கல்கியில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். வில்லனாக கமல்ஹாசன் வருகிறார். இப்படி தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படத்திலேயே நடித்து இருக்கும் பிரபாஸ் அடுத்ததாக ராஜாசாப் என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகும் இதனை மாருதி என்பவர் இயக்குகிறார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்தத் திரைப்படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மாளவிகா மோகனன் உட்பட மூன்று கதாநாயகிகள் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





