பாகுபலி என்னும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்ததோடு சரி, அதன் பிறகு ஒரு சாதாரண வெற்றியை கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். ஆரம்பத்தில் மாஸ் ஹீரோவுக்கான இலக்கணங்கள் இல்லாமல் தெலுங்கு சினிமாவில் நுழைந்த அவர், தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
டார்லிங், பில்லா, மிஸ்டர் பர்ஃபெக்ட் எனத் தொடர் வெற்றி படங்களை கொடுத்த வந்த அவருக்கு, பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பொன்னான வாய்ப்பை கொடுத்தார் ராஜமௌலி. அந்தப் படத்தின் இரண்டு பாகங்களிலுமே, ஒரு மன்னனுக்கே உண்டான மிடுக்கான பார்வையில் வந்து கலக்கி இருந்தார் பிரபாஸ்.
இந்திய சினிமாவில் வேறு எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு பாகுபலிக்கு கிடைத்தது. இப்போது வரை இந்திய அளவில் அதிகளவு வசூல் ஈட்டிய திரைப்படமாக இது விளங்குகிறது. அதுமட்டுமல்ல பாகுபலியில் நடித்ததன் மூலம், பேன் இந்தியா நடிகராக உருவெடுத்தார் பிரபாஸ். ஆனால் இதன் பிறகு தான் அவருக்கு வினை வந்தது என்று கூறலாம்.
தான் இந்திய நட்சத்திரம் என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்ட அவர், இனி பிரம்மாண்ட படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்தார். அதன் விளைவாக சாஹோ திரைப்படம் மிகப்பெரிய பொருட்செல்வில் எடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவான சாஹோ, ரசிகர்களை சோதித்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் படு தோல்வியை சந்தித்தது.
இதன் பிறகு, ராதே ஷ்யாம் படத்தில் நடித்தார் பிரபாஸ். காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும், அதிகளவு பொருட்செலவில் உருவாகி மண்ணை கவ்வியது. இதன் பிறகும் விழித்துக் கொள்ளாத பிரபாஸ், ஆதி புருஸ் என்னும் அனிமேஷன் திரைப்படத்தில் நடித்தார். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்கள் சிரித்து கொண்டாட, படம் மட்டும் வசூல் ஈட்ட தவறியது.
பிரபாஸின் இந்த முடிவுகளால், அவரின் அடுத்த திரைப்படமான சலாரின் டிஜிட்டல், ஓடிடி உரிமங்கள் விற்பனையாகாமல் உள்ளன. இதன் நடுவே கல்கி 2898 என்னும் பிரம்மாண்ட திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இருப்பினும், பான் இந்தியா என்றும் பெயரில் இப்படி பிரம்மாண்டமான படத்தில் மட்டுமே நடிப்பதை பிரபாஸ் கைவிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.
இப்படியான சூழலில் மீண்டும் அவர் தனது 25வது திரைப்படத்தை பான் இந்தியாவாக கொடுக்க ஆசைப்பட்டுள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி எடுக்கும் இந்த படத்திற்கு, ஸ்பிரிட் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்த தகவலால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும், பிரம்மாண்டமாக மட்டும் இந்த படம் இருந்து விடக்கூடாது என்று கூறி வருகின்றனர்.





