தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் டி ராஜேந்தர். பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர். கதை ஆசிரியர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என அடையாளங்களை கொண்டவர். டி ராஜேந்தர் படம் என்றாலே தியேட்டர்களில் திருவிழா கூட்டம் காணப்படும். குறிப்பாக பெண்களை தொடாமல் நடிக்கும் டி ராஜேந்தருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருந்தனர்.
டி ராஜேந்தர் இயக்கிய படங்கள் எல்லாமே வெள்ளிவிழா கண்ட படங்களாக அப்போது இருந்தன. மைதிலி என்னை காதலி ஒரு தலை ராகம் உயிருள்ளவரை உஷா ஒரு தலை ராகம் ரயில் பயணங்களில் தங்கைக்கோர் கீதம் உறவை காத்த கிளி என் தங்கை கல்யாணி ஒரு தாயின் சபதம் என அவரது பட டைட்டிலே ரசிகர்களை கவர்ந்து விடும்.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் டைரக்ட் செய்த சில படங்களை அடுத்தடுத்து ரி ரிலீஸ் செய்ய உள்ளேன். குறிப்பாக செப்டம்பர் மாதம் உயிருள்ளவரை உஷா படத்தை வெளியிடுகிறேன்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் உயிருள்ள வரை உஷா படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. அடுத்து ஒரு தலை ராகம் மைதிலி என்னை காதலி படங்களையும் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன. உயிர் உள்ளவரை உஷா படத்தை நான் எடுத்தபோது எனது நண்பரான ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அந்த படத்தில் நான் நடித்த செயின் ஜெயபால் வேடத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
அப்போது கதையை கேட்ட ரஜினிகாந்த் நடிப்பதற்கு சம்மதித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தில் தான் நான் நடிப்பேன் என்று ரஜினி கூறிவிட்டார். அப்போது புது நிறுவனமாக இருந்த எனது தஞ்சை சினிமா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில்தான் உயிருள்ளவரை உஷாவை நான் தயாரிக்க திட்டமிட்டு இருந்தேன்.
அதனால் நான் பிரபலமான நிறுவனமான பிறகு உங்களை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறிவிட்டு வந்து விட்டேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதை இப்போதுதான் நான் இதைக் கூறுகிறேன் என்று இயக்குனர் டி ராஜேந்தர் கூறியிருக்கிறார். டி ராஜேந்தர் சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ரஜினிகாந்த் அறிமுக பாடலுக்கு அனிருத் இசையில் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





