மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் ஏற்கனவே வெளியான திரிஷ்யம் திரிஷ்யம் 2 என இரண்டு பாகங்களாக வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் 3ம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படம் 230 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர் திரிஷ்யம் படக்குழுவின் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். திரிஷ்யம் 3 படத்தில் நடிகர் மோகன்லால் பயன்படுத்தும் காருக்கு, என்னுடைய காரின் பதிவு எண்ணை தனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக மூணார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ராஜீவ் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் ராஜீவ் கூறியிருப்பதாவது, நடிகர் மோகன்லால் திரிஷ்யம் 3 படத்தில் பயன்படுத்தும் காருக்கு என்னுடைய வாகன எண்ணை அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் காட்டப்படும் எண்ணை வைத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அது நிஜமான வாகன உரிமையாளரான என்னை வம்பில் இழுத்து விடும்.
இதனால் தனிப்பட்ட முறையில் சட்டரீதியாகவும் எனக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் திரிஷ்யம் 3 படத்தில் என்னுடைய கார் எண்கள் இடம்பெறும் காட்சிகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தில் இருந்து அந்த காட்சிகளை நீக்காவிட்டால் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக அடுத்தகட்டமாக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் மனுதாரர் ராஜிவ் எச்சரித்துள்ளார்.
வழக்கமாக திரைப்படங்களில் இதுபோன்ற கார்கள் மொபைல் எண்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது படத்தில் சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர்கள் அல்லது டெக்னிஷியன்கள் என அவர்களது எண்களை தான் பயன்படுத்துவது வழக்கம். ஏனென்றால் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் திரிஷ்யம் 3 படத்தில் நடிகர் மோகன்லால் பயன்படுத்திய காரின் எண், இடுக்கியை சேர்ந்த ராஜீவ் என்பவரது வாகனத்தின் எண்ணாக இருப்பதால் அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கார் எண்கள் வரும் காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும்படி போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த கவனக்குறைவால் படக்குழுவுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.





