லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் என்னும் திரைப்படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த ஞானவேல் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர். தனது முதல் திரைப்படத்திலேயே சொல்ல வந்த விஷயத்தை, எந்தவித சமரசமும் இன்றி காட்சிப்படுத்தியதால் பலராலும் பாராட்டப்பட்டார் ஞானவேல்.
இப்படியான சூழலில், அவர் அடுத்த திரைப்படத்திற்காக ரஜினிகாந்துடன் இணைந்து இருப்பது பலரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. அது, படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நட்சத்திரங்கள் தான்.
முக்கியமாக பாலிவுட்டிலிருந்து அமிதாபச்சன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இருப்பினும் அவர் ஒரு சில காட்சிகள் தான் படத்தில் வருவார் என்று கூறப்படுகிறது. இது போக மலையாள உலகில் இருந்து பகத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கு உலகில் இருந்து ராணா இடம் பெற்றிருக்கிறார். இது போக துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி நாகர்கோவில் புதுச்சேரி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது இறுதி கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் குறி வச்சா, இரை விழனும் என்ற ரஜினியின் டயலாக் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதுபோக என்கவுண்டரை மையப்படுத்தியே கதை நகரும் என்றும் கூறப்பட்டது. இப்படியான சூழலில் படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, கல்வித்துறையில் நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
படத்தில் பகத் பாசிலுக்கு நகைச்சுவையான கதாபாத்திரத்தை ஞானவேல் கொடுத்திருக்கிறாராம். அப்படியானால் படத்தின் வில்லன் யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த சூழலில், அதற்கான பதிலும் கிடைத்திருக்கிறது. ராணா தான் இதில் வில்லனாக நடித்து வருகிறாராம். அக்டோபர் மாதம் வேட்டையன் படம் வெளியாகும் நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





