வணக்கம் தமிழ் அன்பு நெஞ்சங்களே என்று இலங்கை வானொலியில் ஒலித்த அந்த கணமான, கம்பீரமான பி ஹெச் அப்துல் ஹமீது இனிமையான குரலை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவரது குரலை பலரும் காதலிக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல, 1990களில், சன்டிவியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என்ற இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அசத்தியவர். முன்னணி நிறுவனங்களின் நிறைய விளம்பரங்களில் இவரது குரல் ஒலிக்கும்.
இவரது தனிச்சிறப்பு என்னவென்றால், கடுகளவும் ஆங்கிலம் கலக்காமல் சுத்த தமிழில் மட்டுமே பேசுவார். தெளிவான தமிழில் அழகான குரலில் அவர் உச்சரிப்பில் காட்டும் ஏற்றம், இறக்கம், பாவனை, உற்சாகம், ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் படியாக இருக்கும். அவர் பேசுவதை கேட்பதற்காகவே அவரது நிகழ்ச்சியை கேட்க பலரும் தீவிர ஆர்வம் காட்டுவர். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில், நேற்றிரவு பி. ஹெச் அமீது இறந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி, அவரது ரசிகர்களின் மனங்களை பதற வைத்தது. இதுகுறித்து பி.ஹெச் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, மாண்டவன் மீண்டும் வந்து பேசுகிறானே என பலரும் வியந்து நோக்க கூடும். நேற்று நள்ளிரவு முதல், இந்த நிமிடம் வரை நித்திரை கொள்ளவில்லை.
அந்த விஷமச் செய்தியை கேட்டு பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை தொலைபேசியில் அழைத்தனர். என் குரலை கேட்ட பின்னரே, நான் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். அதிலும் சிலர் என் குரலை கேட்டவுடன் அவர்கள் கதறி அழுததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை அன்பு உள்ளங்களை பெற என்ன தவம் செய்தார்களோ என்னுடைய அன்னை.
நான் செத்துப் பிழைப்பது எனக்கு இது மூன்றாவது அனுபவம். கடந்த 1983ம் ஆண்டில் நடந்த இனக்கலவரத்தின் போது என்னையும், என் மனைவியையும் உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டதாக இலங்கை மட்டுமின்றி, தமிழகத்திலும் வதந்தி பரப்பி விட்டனர். 2 ஆண்டுகளுக்கு முன் யூடியூப்பில் ஒருவர் அதிக பணம் ஈட்டும் பேராசையில், நான் இறந்துவிட்டதாக, புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியிட்டார். இப்போது இது 3வது முறை. ஆகவே நான் மூன்று முறை உயிர்த்தெழுந்து இருக்கிறேன் என்று நகைச்சுவையாக சொல்ல தோன்றுகிறது.
நாம் இறந்த பிறகு நம் மீது அதிக பாசம், அன்பு கொண்டவர்கள் யார் என்று பார்க்க முடியாது. ஆனால் வாழும் காலத்திலேயே அது பற்றி கணிக்கவும், அதுபற்றி அறிந்துக்கொள்ளவும் இறைவன் கொடுத்த சந்தர்ப்பம்தான் இது. இந்த செய்தியை பரப்பிய மனிதரை காப்பாற்றும்படி இறைவனை வேண்டுகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி, என்று அதில் உருக்கமாக பி ஹெச் அப்துல் அமீது பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.





