தமிழ் சினிமாவில் தற்போது முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் ஹெச் வினோத். சதுரங்க வேட்டை என்னும் ஒரு திரைப்படமே அவர் யார் என்பதை சொல்லிவிடும். இப்போதும் கூட எங்காவது மோசடி நடைபெற்று விட்டால் அது சதுரங்க வேட்டை பாணியில்தான் என்று ஆரம்பிப்பார்கள். அந்த அளவுக்கு மக்களிடையே பரீட்சையமானது அந்த திரைப்படம்.
தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்னும் அட்டகாசமான திரைப்படத்தை வினோத் கொடுத்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, அவர் எடுத்த ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை இருக்கையின் நுணுக்கி வரவழைத்தன. இதனைத் தொடர்ந்து அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று திரைப்படங்களை அவர் இயக்கினார்.
தற்போது விஜய்யை வைத்து கடைசி படத்தை இயக்கி முடித்து பலரது பார்வையையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். ஜனநாயகன் என இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் விஜய். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் வினோத் அடுத்ததாக தனுசுடன் இணையப் போவதாக தகவல் வெளியானது. தனுஷ் தற்போது இட்லி கடை மற்றும் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய, விக்னேஷ் ராஜாவுடன் இணைந்திருக்கிறார் தனுஷ். வேல்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
இதன்பிறகு அடுத்ததாகவும் வேல்ஸ் நிறுவனத்தின் கீழேயே ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இது தனது கனவு திரைப்படம் என்றும், எளிய கதைதான் என்றாலும் அது பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். தனது திரையுலக பயணத்திலேயே மைல்கல்லாக அந்த திரைப்படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இப்படி விக்னேஷ் ராஜா மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் திரைப்படங்களுக்கு பிறகு, அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் தனுஷ் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியானது. அதேசமயம் வினோத் உடனான படம் குறித்தும் அவ்வபோது பேசப்பட்டு வந்தது. இப்படியான சூழலில் அண்மையில் பேட்டியளித்த இசை அமைப்பாளர் சாம் சி எஸ், தனுஷ் – வினோத் இணையும் திரைப்படத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்தப் படத்திற்கு தான்தான் இசையமைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





