தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் பலருக்கும் பரீட்சையமானவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதியர். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண சமயத்தில்தான் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியால் படமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் போய்விட்டது என்று அதன் இயக்குனர் கிருஷ்ணா கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இன்றுவரை எனக்கு ஒரு உறுத்தல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அந்தப் படத்தில் சூர்யாவின் கல்லூரி காதல் பற்றி தெரிய வரும் ஜோதிகா, பூமிகாவை தனது வீட்டிற்கு அழைப்பார். அப்போது சூர்யா ஜோதிகாவின் அருகில் செல்ல, நான்தான் பூமிகாவை வரவழைத்தேன் என்ற உண்மையை கூறுவார்.
இந்த காட்சியை நான் படம் பார்க்கும் போது, ஜோதிகா அழுது கொண்டே சூர்யாவிடம் தனது எமோஷனை வெளிப்படுத்துவார். அந்த டேக் முடிந்ததும் மொத்த படக்குழுவும் ஜோதிகாவை வாழ்த்தினர். ஆனால் எனக்கு அந்த காட்சி சரியாக படவில்லை. ஜோதிகா அதில் அழுது நடித்தது எனக்கு உடன்படவில்லை. அப்படி அவர் அழுது கொண்டிருக்கையில், சூர்யா பூமிகாவுடன் சென்றால் அது ஆடியன்ஸ்களுக்கு உறுத்தலாக இருக்கும்.
இதனால் அவரிடம் நீங்கள் கண்ணீர் வடிக்காமல் இதே காட்சியை மறுபடியும் நடியுங்கள் என்று கூறினேன். அவரும் அதனையே செய்து முடித்தார். பிறகு எடிட் சூட்டிற்கு செல்லும் போது, ஜோதிகா நடித்த முதல் டேக்கையே படத்தில் வைக்கலாம் என்று பலரும் கூறினர். ஆனால் நான் விடவில்லை. எமோஷ்னலாக அது சரி இருக்காது என்று மீண்டும் மீண்டும் கூறினேன்.
அதன் பிறகு எடிட் சூட்டில், பலரிடமும் கேட்க எல்லாரும் படத்தின் முதல் டேக்தான் நன்றாக வந்தது என்று கூறிக் கொண்டே இருந்தனர். அதை ஒப்பிடுகையில் இரண்டாம் டேக் சுத்தமாக எடுபடவில்லை என்றும் தெரிவித்தனர். இதனால் எனக்கே ஒருவித சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. கடைசியில் பலரும் கூறியது போல அந்த டேக் தான் திரையில் வந்தது.
ஆனால் அது ஆடியன்ஸ்களிடம் சரியாக போய் சேரவில்லை. அவர் அழுது நடித்தது யாருக்கும் பிடிக்கவில்லை. நான் சென்ற திரையரங்குகளில் இதை நன்றாக கவனித்தேன். அப்போதுதான் நினைத்தேன், நாம் படத்தின் இரண்டாம் டேக்கை வைத்திருக்க வேண்டும். ஒரு இயக்குனராக நான் அதை தவற விட்டு விட்டேன். ஒரு ஷாட், ஒரு டேக் படத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும். நான் நினைத்தது மட்டும் நடந்திருந்தால் படம் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருக்கும். அதனை நினைத்து நான் இப்போதும் வருத்தப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.





