தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாகnஉருவெடுத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.தனது டைமிங் காமெடியினாலும், ரைமிங் வசனத்தினாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய சிவகார்த்திகேயன், நம்ம வீட்டுப் பிள்ளையாக திரையுலகில் வலம் வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் குவித்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப்புடன் இணைந்து பிரின்ஸ் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. சிவகார்த்திகேயனின் திரை உலகில் மோசமான விமர்சனங்களை சந்தித்த இந்த திரைப்படம், அவரை அதள பாதாளத்திற்கு கீழே தள்ளியது.
இதனால் அடுத்த படத்தில் நடிப்பதற்கான தேர்வில் மிக தெளிவாக இருந்தார் சிவகார்த்திகேயன். நிச்சயம் வரும் படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் பலரிடம் கதை கேட்ட அவர், கடைசியாக மடோன் அஸ்வின் கதையை டிக் செய்தார். ஏற்கனவே மண்டேலா படத்தின் மூலம் தேசிய விருதை பெற்ற மடோன் அஸ்வின், கவனிக்கத்தக்க இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்ற நிலையில், அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

மாவீரன் என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. படத்தின் நாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா, நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார். ஃபேண்டஸி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
கார்ட்டூனிஸ்டாக பணிபுரியும் சிவகார்த்திகேயன், விபத்து காரணமாக தலையில் பலத்த காயம் அடைந்து மீள்வதாகவும், அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள்தான் படத்தின் மையக்கரு என்றும் கூறப்படுகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஆகாயத்திலிருந்து ஒரு குரல் கேட்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அது தொடர்பான காட்சிகள் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்தன. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் நடிகர் விஜய் சேதுபதிதான் என்ற மிகப்பெரிய ட்விஸ்ட்டையும் படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
#Sivakarthikeyan at Rohini theaters..💥#Maaveeran #MaaveeranFDFSpic.twitter.com/ZnwH7qEGKd
— VCD (@VCDtweets) July 14, 2023
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாவீரன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதனால் படு உற்சாகத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், காலை முதல் சென்னையில் உள்ள ஒவ்வொரு திரையரங்குகளுக்கும் விசிட் அடித்து வருகிறார். குரோம்பேட்டை வெற்றி, கோயம்பேடு ரோகிணி, ஜாபர்கான் பேட்டை காசி திரையரங்குகளுக்கு சென்ற சிவகார்த்திகேயன், ரசிகர்களின் ஆரவாரத்தில் படம் பார்த்து ஆனந்தம் அடைந்தார். இதனிடையே மாவீரன் திரைப்படம் நன்றாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.





