நடிகராக பாடகராக தயாரிப்பாளராக இருந்த நடிகர் தனுஷ் இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவரது அப்பா கஸ்தூரி ராஜா ஒரு இயக்குனர், அவரது அண்ணன் செல்வராகவன் ஒரு இயக்குனர் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனர் என்ற நிலையில் இப்போது நடிகர் தனுஷூம் முன்னணி இயக்குனராக மாறியிருக்கிறார்.
ராஜ்கிரண் ரேவதி நடிப்பில் முதுமை காதலை மையப்படுத்தி தனுஷ் இயக்கிய முதல் படம் ப பாண்டி பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்தாண்டில் தனது 50வது படம் ராயன் படத்தில் நடித்த தனுஷ், அந்த படத்தை அவரே இயக்கினார். ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் துஷாரா விஜயன் அபர்ணா பாலமுரளி செல்வராகவன் காளிதாஸ் ஜெயராம் சந்தீப் கிஷன் எஸ்ஜே சூர்யா நடித்திருந்தனர்.
ராயன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்த 8 படங்களில் ராயன் படமும் ஒன்றாக இருந்தது. தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் டைரக்ட் செய்திருக்கிறார். அடுத்து இட்லி கடை என்ற படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம், சுருக்கமான நீக் என அழைக்கப்படுகிறது. வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்துள்ளார். காதல் காமெடி கலந்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்று பிரிவியூ ஷோ பார்த்த நடிகர் எஸ்ஜே சூர்யா கூறியிருக்கிறார்.
தனுஷ் இயக்கத்தில் அடுத்து வர உள்ள இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கி உள்ளது. அந்த படக்காட்சிகள் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சத்யராஜ் ராஜ்கிரண் நித்யாமேனன் தனுஷ் அருண் விஜய் நடிகர் பார்த்திபன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
தாய்லாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் அனைத்து நடிகர்களும் பங்கேற்க வேண்டிய முக்கிய காட்சிகள் படமாக்க வேண்டி இருப்பதால், அனைவரையும் ஒன்றிணைத்து படப்பிடிப்பை நடத்துவதில் இயக்குனர் தனுஷூக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நடிகரும் பிஸியாக இருப்பதால் தனுஷ் தடுமாறி வருகிறார். இந்த சூழலில் இட்லிக்கடை படம் ரிலீஸ் ஏப்ரல் 10ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லி ஏப்ரல் 10ல் வெளிவருவதால் இந்த மாற்றம் என்றும் கூறப்படுகிறது.





