பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கார்த்தி. ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அவர், பிறகு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது அண்ணன் சூர்யாவை போல் கதாநாயகனாக உருவெடுத்தார்.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த அவர், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி உட்பட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஒரு இயக்குனருடன் மீண்டும் இணையாமல் நடித்து வந்த கார்த்தி, முத்தையாவுடன் மட்டும் கொம்பன், விரும்பன் என இரண்டு திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை எடுத்த ராஜூ முருகன்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகவும் தொய்வான திரைக்கதையினால் ஜப்பான் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
கார்த்திக்கு 25வது திரைப்படம் இப்படி அமைந்துவிட்டது என்று அவரது ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் மற்ற நடிகர்களுக்கு 25வது திரைப்படம் எப்படி அமைந்தது என்று பார்க்கலாம். இன்று ரசிகர்களால் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய், தனது 25வது திரைப்படமாக கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்தார்.
மனநிலை சரியில்லாத சைக்கோ கதாபாத்திரத்தில் அவர் நடிக்க, வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட கண்ணுக்குள் நிலவு ரசிகர்களை கவர தவறியது. அஜித்துக்கு 25 திரைப்படமாக அமர்க்களம் அமைந்தது. சரண் இயக்கத்தில் விறுவிறுப்பாக நகர்ந்த இதன் திரைக்கதை உண்மையிலேயே அமர்க்கள படுத்தியது. அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை இது தேடி கொடுத்தது.
இதே போல் நடிகர் தனுஷ், 25 வது திரைப்படமாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். பொறியியல் படித்துவிட்டு வேலைக்கு திண்டாடும் இளைஞர்களின் வாழ்க்கையை இது பிரதிபலித்ததால், இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதே போல் நடிகர் சூர்யாவும் தனது 25வது திரைப்படமாக சிங்கம் படத்தில் நடித்து, தனி முத்திரையை பதித்தார். இன்று வரை காதலர்களால் கொண்டாடப்படும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சிம்புவின் 25 வது திரைப்படம் என்பது பலருக்கும் ஆச்சரியமே.





