அண்மை காலங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்த திரைப்படம் ஜெயிலர். அவர் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் குவித்த திரைப்படம் ஜெயிலர் என்று கூட கூறலாம். கிட்டத்தட்ட அந்த படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இத்தனைக்கும் ஜெயிலர் திரைப்படத்தை விமர்சன ரீதியாக அந்த அளவு நாம் கொண்டாடி விட முடியாது. படத்தின் இரண்டாம் பாதி கதைக்கு சம்பந்தமில்லாத இடங்களில் எல்லாம் பயணிக்கும். நகைச்சுவை என்ற பெயரில் நிறைய இடத்தில் கூட சோதிப்பார்கள். திரைக்கதையிலும் சற்று தொய்வு இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி படம் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு காரணம் ரஜினிகாந்த் தான்.
ரஜினி ரசிகர்களின் உணர்வை சரியாக புரிந்து கொண்ட இயக்குனர் நெல்சன் அவருக்கென தனி மாஸ் காட்சிகளை அமைத்து பாராட்டைப் பெற்றார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கன்னட நடிகர் சிவகுமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் வந்த சீன்கள் திரையரங்குகளில் விசில் பறக்க வைத்தன. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம்.
இதன் காரணமாக ரஜினிகாந்த் தான் அடுத்தடுத்து நடித்து வரும் திரைப்படங்களில் பிறமொழி நட்சத்திரங்கள் இருப்பதை உறுதி செய்து வருகிறார். வேட்டையன் திரைப்படத்தில் பகத் பாஸில் ராணா அபிதாப் பச்சன் உள்ளிட்டோர் இருந்தார்கள்.
தற்போது, தயாராகி வரும் கூலி திரைப்படத்திலும், அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா சோபின் ஷாகிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த பாணி தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. சொல்லப்போனால் இதனை அறிமுகப்படுத்தியதே இயக்குனர் நெல்சன் தான்.
இந்த முறை இரண்டாம் பாகத்திற்காக அவர் தெலுங்கு நடிகரும், மசாலா காட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கும் நாதமுரி பாலகிருஷ்ணாவை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஏற்கனவே அவரை முதல் பாகத்தில் நடிக்க வைக்க தான் முயற்சி செய்ததாக நெல்சன் பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். இப்படியான சூழலில் தான் அவரை இரண்டாம் பாகத்தில் இடம்பெற வைக்க முடிவு செய்து அதற்கான காய்களை நெல்சன் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





