கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் 2 வேடங்களில் நடித்த படம் நாட்டாமை. கடந்த 1990களில் வெளியான இந்த படத்தில் வில்லன் பொன்னம்பலத்தின் அம்மாவாக நடிகை மனோரமா நடித்திருப்பார். அதில் தனது அம்மா மனோரமாவை தாய்கிழவி என்று பொன்னம்பலம் கிண்டலாக அழைப்பார். அது ரசிகர்களிடம் அப்போதே ரசித்து பேசப்பட்டது.
அதை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நித்யாமேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தாய்கிழவி தாய்கிழவி என்ற பாடலுக்கு நடிகர் தனுஷ் நடனமாடியிருப்பார். அந்த பாடலும் ஹிட் ஆன நிலையில் இப்போது தாய்கிழவி என்ற டைட்டிலுடன் ஒரு படமே வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த படம் தாய்கிழவி. இதில் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் தென்மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி போன்ற கெட்டப்பில் நடிகை ராதிகா சரத்குமார் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு பல விருதுகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அடையாளமே தெரியாத அளவுக்கு அவரது மேக்கப்பை பார்த்து நடிகர் கமல்ஹாசனே ராதிகாவை பாராட்டியதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்து வியந்து போன நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்கு தந்ததும் குறிப்பிடத்தக்கது.
மிக விரைவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க படக்குழு தரப்பில் திட்டமிட்டுள்ளனர். தாய்கிழவி படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க இருந்தனர். ஆனால் பிறகு நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. வருகிற 20ம் தேதி தாய்கிழவி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது பிப்ரவரி 27ம் தேதி தாய்கிழவி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் ஜூனில் தான் ரிலீஸாகும் என்பதால் தாய்கிழவி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக தெரிகிறது.





