இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. மும்பையை சேர்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம், அதிக பொருட்செலவில் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் ஒரு பங்குதாரராக இளையராஜாவும் இருக்கிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் டைரக்ஷன் செய்கிறார். இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.
சில தினங்களுக்கு முன், இந்த படத்தின் துவக்க விழா மற்றும் அறிமுக போஸ்டர் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துக்கொண்டு அறிமுக போஸ்டரை வெளியிட்டார். இளையராஜா, தனுஷ், பாரதிராஜா, கங்கை அமரன், டைரக்டர் ஆர்வி உதயகுமார், சந்தானபாரதி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துக்கொண்டனர்.
இந்த படத்தின் அறிமுக போஸ்டரில் தனுஷ், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்மோனிய பெட்டியை வைத்தபடி நிற்பது போலவும், அப்பகுதியில் சேறும் சகதியுமாக இருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இது பயங்கரமான விமர்சனத்தை, சர்ச்சையை ஏற்படுத்தியது.
போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள், தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இருந்து ரயிலில் வந்தால், எக்மோர் ஸ்டேஷனுக்குதானே இளையராஜா வரவேண்டும், அதுமட்டுமின்றி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் முன் இப்படி எல்லாம் சேறுசகதியுமாக அந்த காலகட்டத்தில் இருக்கவில்லை. 1960களில் அங்கு தார்ரோடு போடப்பட்டு இருந்தது என்றும் பங்கம் செய்து கலாய்த்திருந்தனர்.
இந்நிலையில் இளையராஜா படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுவதாக கூறியிருக்கிறார். ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அவர் பிஸியாக இருப்பதும், அடுத்து தக்லைப் உள்ளிட்ட படங்களில் அவர் நடிக்க வேண்டியிருப்பதாலும், அந்த திரைக்கதை எழுதும் பொறுப்பை, படத்தின் நாயகன் நடிகர் தனுஷே ஏற்றுக்கொண்டு இருக்கிறார். படத்துக்கு கதை வசனம் எழுதப் போகிறவரும் அவர்தான் என்றும் முடிவாகி உள்ளது.
இப்போது இந்த படத்தின் புதிய தகவலாக, இளையராஜா பயோபிக் படத்தை அவரது நீண்ட கால சரித்திரத்தை ஒரே படத்தில் அனைத்து விஷயங்களையும் தரமுடியாது என்பதால், இரண்டு பாகங்களாக அந்த படம் உருவாகிறது. இதில் இளையராஜா இளமை பருவம், சென்னைக்கு வருவது, அன்னக்கிளி பாடல் பதிவு வரை முதல் பாகமாகவும், அதன்பிறகு அவரது வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பிரச்னைகளை மையப்படுத்தி 2ம் பாகமாகவும் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் தனுஷ் சம்பளம் ரூ. 50 கோடியில் இருந்து, இந்த படத்துக்கு மட்டும் ரூ. 100 கோடியாக உயர்ந்துள்ளது.





