சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. வருகிற 2026 ஜனவரி 14ம் தேதி பராசக்தி படத்தை வெளியிட படக்குழு தரப்பில் அனைத்து ஏற்பாடுகளையும் பரபரப்பாக செய்து வருகின்றனர். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி முதலிலேயே வாங்கி விட்டது.
ஆனால் பராசக்தி படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இன்னும் டிஜிட்டல் உரிமம் வியாபாரம் நடக்காமல் தாமதம் நீடிக்கிறது. கடைசியாக அமேசான் ஓடிடி நிறுவனம் இந்த படத்தை வாங்குவதற்கான விலை பேசிய நிலையில் இப்போது இன்னும் வியாபாரம் முடிவாகாமல் நீட்டிக்கொண்டே போகிறது.
இதற்கு முக்கிய காரணம் பராசக்தி படம் இந்தி திணிப்பை எதிர்க்கும் ஒரு கதைக்களத்தில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை முதலிலேயே தெள்ளத் தெளிவாக அறிந்தததால்தான் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிக்க முதலில் சம்மதித்து விட்டு பிறகு இந்த படத்தை விட்டு வெளியேறி விட்டார். ஏனெனில் இந்தியை எதிர்க்கும் கேரக்டரில் நடித்தால் தன்னால் இந்தியில் நடிக்க முடியாது. வடமாநிலங்களிலும் பெயர் டேமேஜ் ஆகிவிடும் என்று சூர்யா கணித்திருக்கிறார்.
இப்போது அந்த பிரச்னைதான் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் விலை பேசி வியாபாரம் செய்வதில் பெரிய தடையாக இருக்கிறது. இது இந்திக்கு எதிரான படம் அல்ல. இந்தி மொழி திணிப்புக்கு எதிரான ஒரு படம்தான் என்றாலும் இந்தி மொழி பேசும் வடமாநில மக்கள் மத்தியில் இந்த படம் எதிர்ப்பை ஏற்படுத்தும். அதனால் வணிகம் பாதிக்கப்படும் என்று ஓடிடி நிறுவனங்கள் கருதுகின்றன.
ஏனெனில் தமிழ் படங்களுக்கு ஆங்கில தலைப்புகளை வைக்க சொல்வதே ஓடிடி நிறுவனங்கள்தான். ஏனெனில் ஆங்கில டைட்டில் இருந்தால் வடமாநில ரசிகர்களும் இந்த படங்களை ஓடிடியில் விரும்பி பார்ப்பார்கள். அதே நேரத்தில் இந்தியை எதிர்க்கும் ஒரு கதைக்களத்தில் உருவான படம் என்றால் அதை அவர்கள் நிராகரிப்பார்கள் என்றும் ஓடிடி நிறுவனங்கள் கூறுகின்றன.
அதனால் பராசக்தி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட எந்த டிஜிட்டல் நிறுவனமும் தயாராக இல்லை. அதனால் எதிர்பார்த்த விலைக்கு பராசக்தி படம் ஓடிடி யில் விற்பனை ஆகுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் இந்தியை எதிர்க்கும் ஒரு படமாக அது விமர்சனம் எழுந்தால் வடமாநிலங்களில் இந்த படத்தை யாருமே வாங்கவும் மாட்டார்கள், ஓடிடியில் வாங்கவும் மாட்டார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது.





