கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களின் தனிப்பட்ட உணர்வாக இருக்கிறது. மக்களின் பாரம்பரியமும் கலாச்சாரமும் நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையில் கலந்து இருக்கிறது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கடவுள் மீது பக்தர்கள் அளவு கடந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருக்கின்றனர். ஆந்திராவில் திருப்பதி மலைமீது அமைந்துள்ள திருமலை வாசன் வெங்கடாஜலபதியை சாதாரண மக்கள் முதல் நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் வரை அனைவரும் வந்து தரிசித்து தங்களது பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
சமீபத்தில் திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் சில பொருட்கள் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சில விலங்குகளின் கொழுப்புகளை பயன்படுத்துவதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி பக்தர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் கடவுள் நம்பிக்கையாளர்கள், சம்பந்தப்பட்டவர்களே கடவுளே தண்டிக்கட்டும் என்றும், கடவுள் மறுப்பாளர்கள் இதையே கிண்டல் கேலியும் செய்து மீம்ஸ், வீடியோ போட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் இது பெரிய அளவில் டிரண்டாகி வருகிறது.
சமீபத்தில் திருப்பதி லட்டு விவகாரத்தில் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியிருந்தார்.
இதற்கு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்கருத்து தெரிவித்து இருந்தார். நீங்கள் துணை முதல்வராகஇருக்கும் ஆந்திரா மாநிலத்தில்தான் இந்த பிரச்சனை நடந்துள்ளது. தயவு செய்து விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள். இந்தப் பிரச்சனையை ஏன் தேசிய அளவில் பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கனவே போதுமான அளவு வன்முறை பதட்ட சூழல் உள்ளது. மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த பவன் கல்யாண், நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்து இருந்தார். எங்களது உணர்வுகளை கேலி செய்ய வேண்டாம். இந்த சம்பவம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இது ஆழமான வழியை தந்துள்ளது. சனாதன தர்மத்தை பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்துப் பேசுங்கள் என்று அவர் அதில் கூறியிருந்தார்.
இதற்கு பதில் தந்து நடிகர் பிரகாஷ்ராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, டியர் பவன் கல்யாண் அவர்களே, உங்களது செய்தியாளர் சந்திப்பை பார்த்தேன். நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டு நீங்கள் பேசியது வியப்பாக உள்ளது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதை முடித்துவிட்டு 30ம் தேதிக்குப் பிறகு உங்களது ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்கிறேன். அதற்குள் எனது பழைய பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் என்று அதில் கூறியிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





