தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஆர் கே சுரேஷ். இவர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தனக்கே உண்டான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார் ஆர் கே சுரேஷ்.
இதற்கு முன்னதாக அவர் தர்மதுரை படத்தையும் தயாரித்து இருந்தார். சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் எதார்த்த வாழ்க்கை களத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
அப்போதே யுவனுக்கும் ஆர்கே சுரேஷுக்கும் இடையே ஒரு நல்ல உறவு ஏற்பட்டது. இதனிடையே மருது திரைப்படத்தில் வில்லனாக நடித்து ஆர்கே சுரேஷ் புகழ்பெற்றார். அதில் அவர் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து பில்லா பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.
இப்படியான சூழலில் பாஜகவில் இணைந்த அவர் தன்னை அரசியல் களத்திலும் நிலை நிறுத்திக் கொண்டார். அதேசமயம் மேடைகளிலும் சர்ச்சையாக அவர் பேசி வந்தார். சமீபத்தில் ஆருத்ரா கோல்டு மோசடியில் ஆர் கே சுரேஷின் பெயரும் அடிபட்டது. இதனால் வெளிநாட்டில் அவர் தலைமறைவாக இருந்தார்.
இப்படியான சூழலில் சமீபத்தில் தமிழ்நாடு திரும்பிய அவர், அந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இப்படியான சூழலில் தென் மாவட்டம் என்னும் திரைப்படத்தை அவர் இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான போஸ்டரும் வெளியானது. அதில் இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா என்று போடப்பட்டிருந்தது. ஆனால் இதனை யுவன் திட்டவட்டமாக மறுத்தார்.
இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவர், தென்மாவட்டம் திரைப்படம் தொடர்பாக தன்னை யாரும் அணுகவில்லை என்று கூறியிருந்தார். அதேசமயம், உங்களிடம் இது தொடர்பாக பேசி இருந்ததாகவும், அந்த ஒப்பந்தத்தை மறந்து விட்டீர்களா என்றும் ஆர்கே சுரேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் இந்த பிரச்சனை அனல் விட்டு எரிந்த நிலையில், தற்போது அதற்கு ஆர்கே சுரேஷ் சுபம் கார்டு போட்டுள்ளார். தனது எக்ஸ் வலைதளத்தில் யுவனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் அவர், தென் மாவட்டம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். ஆர் கே சுரேஷ் இப்படி திடீரென்று மாற என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





