தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் தியாகராஜன். கடந்த 1980களில் பல படங்களில் ஹீரோவாகவும், பின்னர் வில்லனாகவும் தியாகராஜன் நடித்திருக்கிறார். குறிப்பாக தியாகராஜன் நடித்த கொம்பேறி மூக்கன், மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை போன்ற படங்கள், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவையாக அப்போது கொண்டாடப்பட்டன.
அவரது மகன்தான் நடிகர் பிரசாந்த். கடந்த 1990களில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா, ஆணழகன், செம்பருத்தி, கண்ணெதிரே தோன்றினாள், ஜீன்ஸ், காதல் கவிதை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.
பிரசாந்த் படங்களை பொருத்த வரை அவரது நடிப்பு இயல்பாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். முறைப்படி நடனம், சண்டைப்பயிற்சி கற்றுக்கொண்டவர். அதனால் ஆக்சன் காட்சிகளில் டூப் இல்லாமல் சண்டை போடுவார். நடன காட்சிகளிலும் தன் திறமை வெளிப்படுத்துவார். நடிப்பில் குறை சொல்ல முடியாது.
ஆனால் முன்னணி நட்சத்திரமாக இருந்த அவரது குடும்ப வாழ்வில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. அவர் திருமணம் செய்த கிரஹலட்சுமி என்பவர், ஏற்கனவே திருமணமானவர். அதை மறைத்து பிரசாந்துக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணமாகி பல நாட்களுக்கு பிறகுதான் அந்த உண்மை, பிரசாந்த், தியாகராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதனால் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிரசாந்த், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது விஜயுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவரது தந்தை தியாகராஜன் ஒரு நேர்காணலில் கூறுகையில், பொன்னர் சங்கர் படத்துக்காக பிரசாந்த் நிறைய உழைத்தார். அந்த படத்தில் நடித்த 5 ஆண்டுகளில் வேறு படங்களில் அவர் நடிக்கவில்லை. நான் அவர் நடிக்கும் பட விஷயங்களில் எப்போதும் தலையிடுவது இல்லை.அவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்வார். ஷூட்டிங்கில் ஏதாவது பிரச்னை என்றால் மட்டுமே என்னிடம் கூப்பிட்டு சொல்லி, அதை சரிசெய்ய சொல்வார்.
கோட் படத்தின் கதையைக் கூட பிரசாந்த் தான் கேட்டார். கதை அவருக்கு பிடித்திருந்தது. அந்த படத்தில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தது. அதனால்தான் கோட் படத்தில் நடிக்க பிரசாந்த் ஒப்புக்கொண்டார். பிரசாந்த் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர். அதனால் அவரை வில்லன் கேரக்டரில் நடிக்க மட்டும் நான் அனுமதிக்க மாட்டேன், என்று பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் கூறியிருக்கிறார்.





