தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரமான நடிகர் விஜய் இப்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய அவர், முதல் அரசியல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக வெற்றிக்கரமாக நடத்தினார்.
இப்போது தவெக கட்சியின் 2வது அரசியல் மாநாட்டை மதுரையில் வரும் 21ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 25ம் தேதி மாநாடு என முடிவான நிலையில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு காரணங்களை கூறி போலீசார் தேதியை மாற்றுமாறு வலியுறுத்தியதால் இப்போது 4 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 21ம் தேதி தவெக மாநாடு என்று நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார்.
மதுரையில் நடைபெற உள்ள தவெக கட்சியின் இந்த மாநில மாநாட்டில் திரையுலக பிரபலங்கள் குறிப்பாக சில முன்னணி நடிகர் நடிகைகள் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து விசாரித்தால் விஜய் கட்சியில் சேர சிலருக்கு ஆசை இருந்தாலும் தயங்குகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் சட்டசபை தேர்தலில் விஜய் தனித்து நிற்கிறார். அவரது கட்சியில் இணைந்தால் மத்திய அரசு மாநில அரசை எதிர்த்து பிரசார மேடைகளில் விமர்சிக்க வேண்டும். இது தங்களுக்கு தொழில் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். புதுக்கட்சி என்பதால் விஜய் தரப்பில் பிரச்சாரத்தில் சமயத்தில் போதிய பணம் தருவார்களா என்றும் தெரியாது.
அதனால் மார்க்கெட் இருந்த சில நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் விஜய் கட்சியில் சேர யோசிக்கிறார்கள். விஜய் நண்பர்கள் வட்டாரத்தில் இருப்பவர்களும் கூட நட்பு வேறு, அரசியல் வேறு. நாம் தவெக கட்சியில் சேர வேண்டாம் எனவும் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் விஜய் உடன் நடித்த பிரபல ஹீரோயின் மதுரை மாநாட்டில் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் அவருக்கு பதவி தரப்பட உள்ளதாகவும் ஒரு பேச்சு நிலவி வருகிறது.
எனக்கு அரசியல் தெரியாது என்று நடிகை தரப்பு மறுத்தாலும் அவரை கட்சியில் சேர்த்தால் தேவையில்லாத விமர்சனங்களும் வரும் என்பதால் கட்சிக்குள்ளும் சிலர் வேண்டாம் என்று கூறுகின்றனர். அதனால் மதுரை மாநாட்டில் திரையுலகை சேர்ந்தவர்கள் விஜய் முன்னணியில் கட்சியில் இணைய வாய்ப்பு குறைவு என்றுதான் பரவலாக கூறப்படுகிறது. ஆனால் நடிகை திரிஷா நடிகர் விஜயுடன் நெருக்கமான நட்பில் இருப்பதால் கண்டிப்பாக அவர் கட்சியில் இணைவது உறுதி என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.





