ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கி இருந்த அந்த திரைப்படம் கிரிக்கெட் மற்றும் மத அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லாததால் படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.
இந்தப் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே இந்த திரைப்படத்திலும் பிற மாநில நடிகர் நடிகைகளை இடம்பெற வைத்தார் ஞானவேல்.
அதன்படி பகத் பாசில், ராணா ரித்திகா சிங் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்தனர். முக்கியமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சத்ய தேவ் என்னும் கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். இதில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி வெளியான வேட்டையன் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் இந்த படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என்று பலரும் கூறி வந்த சூழலில், அது படத்தின் வசூலை பாதிக்காமல் உள்ளது. என்கவுண்டருக்கு எதிராகவும், கல்வித்துறை பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.
குறிப்பாக படத்தின் முதல் பாதி மிகவும் நன்றாக வந்திருப்பதாக பலரும் கூறுகின்றனர். இப்படி பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பரவி வரும் சூழலில், வேட்டையன் திரைப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என லைக்கா நிறுவனமே தெரிவித்திருக்கிறது.
கடந்த 10 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியான நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வேட்டையன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மூன்று நாட்களில் மட்டும், வேட்டையன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் வாரங்களில் புதிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





