தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. டிஸ்யூம் வேட்டைக்காரன் நான் அவன் இல்லை காதலில் விழுந்தேன் என பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
பிறகு நான் என்ற படம் மூலம் விஜய் ஆண்டனி நடிகராகி அறிமுகமானார். முதல் படமே பெரிய அடையாளத்தை அவருக்கு கொடுத்தது. இந்தியா பாகிஸ்தான் திமிரு புடிச்சவன் பிச்சைக்காரன் போன்ற படங்கள் விஜய் ஆண்டனிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
குறிப்பாக பிச்சைக்காரன் படத்தில் தாய் பாசத்தை அடிப்படையாக கொண்ட படத்தில் மிக சிறப்பான நடிப்பை தந்திருந்தார். அதே போல் திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக அவரது நடிப்பு பெரிய அளவில் கவனத்தை பாராட்டை பெற்றது. இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் விஜய் ஆண்டனி நடித்து விட்டார்.
அவர் நடித்த 25வது படம் சக்தி திருமகன். அதன்பிறகு இப்போது இயக்குனர் சசி இயக்கத்தில் நூறு சாமி என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து ஃபீல் குட் படங்கள் தமிழ் சினிமாவில் ஜெயித்து வரும் நிலையில் அந்த வரிசையில் நூறு சாமி படமும் இணைந்துள்ளது.
பெண்களின் மறுமணம் குறித்து பேசும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி கரும்பு வெட்டும் தொழிலாளியாக நடித்திருக்கிறார். லப்பர் பந்து படத்துக்கு பிறகு நடிகை சுவாசிகாவுக்கு இந்த படம் மீண்டும் ஒரு பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. சமீபத்தில் ஒரு வீடியோவில் இந்த படத்துக்கு கிடைத்த ஆதரவு குறித்து கண்ணீர் விட்டு பேசி அழுது தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் நூறு சாமி படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, இதுவரை நான் நடித்த படங்களில் பெரும்பாலும் கதையை மட்டுமே பாராட்டினார்கள். முதல் முறையாக எனது நடிப்பை பாராட்டிய படம் நூறு சாமி படம்தான் என்று விஜய் ஆண்டனி மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். பிச்சைக்காரன் படத்துக்கு பிறகு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 2வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.





