தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே வசூல் சக்கரவர்த்தியாக விளங்குகிறார் விஜய். அவருக்கு ஒவ்வொரு திரைப்படங்களும் வெளியாகும் போது மார்க்கெட் எந்த அளவு உயர்ந்து இருக்கிறது என்பது அதன் எதிர்பார்ப்பிலேயே தெரிந்துவிடும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகர்களும் நெருங்க முடியாத அளவிற்கு சிம்ம சொப்பனமாக அவர் விளங்கி வருகிறார்.
தற்போது விஜய் இந்த உயரத்தை அடைந்திருக்க மிக முக்கியமாக உதவிய திரைப்படம் கில்லி. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியானது. அதற்கு முன்பு வரை காதல் நாயகனாக இருந்த விஜயை, முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக அது மாற்றியது. தில் தூள் ஆகிய திரைப்படங்களை எடுத்த பரணி தான் இதனை இயக்கியிருந்தார்.
முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் பேக்கேஜாக, நொடிக்கு நொடி பரபரப்பான காட்சிகளுடன், ஆங்காங்கே நகைச்சுவை, காதல் என அனைத்து விஷயங்களையும் ஒரு சேர கலந்து எழுதப்பட்டது கில்லி திரைப்படம். இந்த திரைப்படம் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதற்கு மற்றொரு முக்கிய காரணம் பிரகாஷ்ராஜ்.
முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்த அவர் இன்று வரைக்கும் அந்த ரோலால் புகழ் பெற்று விளங்குகிறார். சொல்லப்போனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் பங்கேற்கும் எந்த கூட்டமானாலும் சரி, செல்லம் என்று பாசமாக அனைவரையும் அழைப்பார். இப்படி கில்லி படத்தைப் பற்றி பேச வேண்டுமானால் நாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
இந்தத் திரைப்படம் கொடுத்த அதிரிபுதிரியான வெற்றியால், கில்லி கடந்த ஆண்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இன்றைய 2k கிட்ஸ் கள் அந்த திரைப்படத்தை பார்க்க மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை காட்ட, படம் தாறுமாறாக ஓடி ஹிட் அடித்தது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம் ஒன்று இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹிட்டாவதை எண்ணி சினிமா விநியோகஸ்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இப்படியான சூழலில் மீண்டும் விஜய் திரைப்படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த முறை விஜய் முழுக்க முழுக்க காதலை அள்ளி வீசிய சச்சின் படத்தை திரையில் இறக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜெனிலியா கதாநாயகியாக நடித்த இந்த திரைப்படம் பலரையும் கவர்ந்தது. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இது வெளியானது. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இருப்பதால், சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.





