விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. பாண்டிராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்க கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இதன் பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றன. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகும் போது அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்தது.
ஆனால் திரைப்படம் வெளியானதும், கலவையான விமர்சனத்தையே தலைவன் தலைவி பெற்றது. கணவன் மனைவிக்கு இடையேயான சண்டை சச்சரவையும், அதற்கு தீர்வு உண்டு என்பதையும் தான் இந்த திரைப்படத்தில் கூறியிருந்தார் பாண்டிராஜ். இது முதல் பாதியில் கிளிக் ஆனாலும் இரண்டாம் பாதி ரசிகர்களின் பொறுமையை சோதித்து விட்டது என்றே கூறலாம்.
இரண்டாம் பாதியில் கதை எந்த கட்டத்திலும் நகராமல் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்ததும், காரணமே இல்லாமல் இருவரும் சண்டை போட்டுக் கொண்ட பிறகு சமாதானம் ஆவதுமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு சலிப்பூட்டியது. இருப்பினும் வசூலில் இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குடும்பம் குடும்பமாக பலரும் தலைவன் தலைவி திரைப்படத்திற்கு படையெடுத்ததால், படத்தின் வசூல் எகிற ஆரம்பித்தது. தலைவன் தலைவி திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி பேசி வருகிறாராம்.
இதில் அவர் மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைவதாக சொல்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த திரைப்படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்த விஜய் சேதுபதி திட்டமிட்டுள்ளாராம். கடந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
அப்போதே அவர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக சொன்னார்கள். தற்போது தலைவன் தலைவி திரைப்படமும் ஹிட் அடித்து இருப்பதால், மீண்டும் தனது சம்பளத்தை உயர்த்த விஜய் சேதுபதி முடிவு செய்திருப்பதாக பேசப்படுகிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் விஜய் அஜித் குமார் ஆகியோர் 200 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.





