தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் போலவே மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதியை சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரந்தோறும் பிக்பாஸ் ஷூட்டிங்குக்கு 2 நாட்களை ஒதுக்கி விடுகிறார். வரும் தைப் பொங்கல் வரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர இருக்கிறது.
இதற்கிடையே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யாமேனன் நடிக்கிறார். வில்லன் கேரக்டரில் மிஷ்கின் நடிப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி திருச்செந்தூர் தென்காசி தேனி திருநெல்வேலி என தென்மாவட்டங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஜனவரி 16ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் விஜய் சேதுபதி, 18ம் தேதி முதல் துவங்கும் இந்த புதிய படத்தின் ஷூட்டிங் கலந்துக்கொள்கிறார்.
அத்துடன் சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகி இருக்கிறார். சப்தம் படத்தை தயாரித்த 7ஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. எஸ்ஆர் பிரபாகரன் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனதால் உடனே ஓகே சொல்லிவிட்டர் விஜய் சேதுபதி.
இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 படம் வெளியாகி திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் பல மாதங்களாகியும் இன்னும் திரைக்கு வரவில்லை. படப்பிடிப்பு முடித்து, போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளும் முடிந்து பல மாதங்களாகிறது.
அதே போல் 2 ஆண்டுகளுக்கு முன் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரித்த பிசாசு 2 படமும் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தை இயக்கியவர் மிஷ்கின், நாயகனாக நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பிசாசு 2 டிரெயின் ஆகிய 2 படங்களுமே வருகிற 2025ம் ஆண்டில் மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





