இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோரின் தந்தை இயக்குநர் கஸ்தூரிராஜா. அவரது மகன்கள் இருவரும் இன்று கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் இயக்குநராக, நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர். அவர்களால் எத்தனை கோடிகளை வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் செலவு செய்ய இன்று முடியும்.
ஆனால், கஸ்தூரிராஜா இயக்குநராக வளர்ந்து வந்த 1990 காலகட்டத்தில், குடும்பத்தில் அவ்வளவு வசதி, பொருளாதார பின்புலம் கிடையாது. கஸ்தூரி ராஜாவுக்கு தனுஷ், செல்வராகவன் ஆகிய மகன்களுடன் 2 மகள்களும் உள்ளனர். அதில் ஒருவர் விமலகீதா, அப்போது டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டார். ஆனால், அரசு மருத்துவக்கல்லூரியில் சேர 5 மதிப்பெண் குறைவாக இருந்தது.
வறுமையான சூழலில் தனியார் மருத்துவ கல்லூரியில் உன்னை படிக்க வைக்க என்னால் முடியாது என, மகளை ஆறுதல் சொல்லி கஸ்தூரிராஜா மகளை தேற்றியிருக்கிறார். அப்போது கஸ்தூரி ராஜா வீடு இருக்கும் பகுதியில் அந்த வீதி வழியாக, ஏதோ ஒரு வேலையாக காரில் விஜயகாந்த் வந்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த அவரது அசிஸ்டெண்ட், அண்ணே இதுதான் டைரக்டர் கஸ்தூரிராஜா வீடு என்க, அப்படியா அப்ப, காரை அவர் வீட்டுக்கு விடு என, கஸ்தூரிராஜா வீட்டுக்குள் சஸ்பென்சாக திடீர் விருந்தாளியாக சென்றார் விஜயகாந்த். அவரை வரவேற்ற கஸ்தூரிராஜா உபசரித்துள்ளார்.
அப்போது விமலகீதா அழுவதை பார்த்த விஜயகாந்த், கஸ்தூரிராஜாவிடம் அதுபற்றி விசாரிக்க, முதலில் தயங்கி கஸ்தூரிராஜா பிறகு உண்மையை சொல்லியுள்ளார். படிக்க ஆசைப்படறவங்களை, கண்டிப்பாக படிக்க வைக்கணும் என்று ஆறுதல் சொன்ன விஜயகாந்த், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி நிர்வாகிகளிடம் பேசி, விமலகீதா டாக்டருக்கு படிக்க சீட் வாங்கி கொடுத்துள்ளார். இப்போது டாக்டர் விமலகீதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஸ்பெஷல் சர்ஜனாக பணிசெய்து வருகிறார்.
இப்படி உதவி தேவைப்படுகிறவர்களுக்கு வீடு தேடிப்போய் உதவுகிற இந்த தங்கமான குணம் விஜயகாந்த் போன்ற உயர்ந்த பண்பாளர்களுக்கு மட்டுமே இருக்கும். இப்போது கோடி கோடியாக பணம் இருந்தாலும், அன்று டாக்டருக்கு படிக்க மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஜயகாந்தின் உயர்ந்த பண்பை நினைக்கும்போது கேப்டன் கேப்டன்தான் என்றுதான் பாராட்ட தோன்றும்.





