கோமாளி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அவரே டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த படம் லவ் டுடே. காதலர்களின் எமோஷனல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓ மை கடவுளே என்ற படத்தை டைரக்ட் செய்த அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அஸ்வத் மாரிமுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதற்கிடையே, கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியதாகவும், கதை மிகவும் பிடித்து விட்டது என்று மகிழ்ச்சியாக கூறிய சிம்பு, அந்த படத்தில் நடிக்க சிம்பு ஒத்துக் கொண்டதாகவும் அஸ்வத் மாரிமுத்து ஒருமுறை கூறியிருந்தார். ஆனால் அந்தப் படம் குறித்து எந்தவிதமான தகவலும் இதுவரை இல்லை.
இந்நிலையில், எல்ஐசி படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் நடிகர் சிம்புவுக்கு சொன்ன கதையில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து, நான் சிம்புவுக்கு சொன்ன கதை வேறு. இது பிரதீப் ரங்கநாதனுக்காக எழுதப்பட்ட புதுக்கதை என்று கூறியுள்ளார்.





