இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார். 3வது படமாக உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை இயக்கினார். இந்த 3 படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை, வெற்றியை பெற்ற நிலையில், அவரது இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான படம் வாழை.
கடந்த 23ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட வாழை படத்துக்கு துவக்கத்தில் இருந்தே பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. வாழை படம் பார்த்த இயக்குனர்கள் பாலா, ராம், மிஷ்கின், பாரதிராஜா, நடிகர்கள் கார்த்தி, தனுஷ், சூரி, விஜய் சேதுபதி, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை, பாராட்டுகளை மாரி செல்வராஜூக்கு தெரிவித்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ், சிறுவனாக இருந்த போது அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கதையை சினிமாவாக எடுக்க தான் சினிமாவுக்குள்ளேயே வந்தேன் என்றும் மாரி செல்வராஜ் ஒரு நேர்காணலில் உருக்கமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன். இவர் 2019ம் ஆண்டில் சூல் என்ற புதினத்தை எழுதியதற்காக இந்த விருதை பெற்றார். அவர் தற்போது வாழை படம் குறித்த ஒரு பரபரப்பான சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதாவது வாழையடி என்ற தனது சிறுகதையை அப்படியே திருடி வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருப்பதாக புகார் எழுப்பி உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாழையபடி என்ற சிறுகதையை எழுதினேன். அச்சில் வந்த அந்த கதையை அப்படியே திரைக்கதை வடிவமாக்கி, இயக்குனர் மாரி செல்வராஜ் வாழை என்ற திரைப்படமாக காட்சி ஊடகத்துக்கு தந்திருக்கிறார் என்று எழுத்தாளர் சோ தர்மன் குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார்.
ஏராளமான நண்பர்கள் போன் செய்து, வாழை படம் பாருங்கள். உங்கள் கதை அப்படியே படமாக வந்திருக்கிறது என்று சொன்னபிறகுதான் இன்று அந்த படத்தை பார்த்து, என் சிறுகதையை மாரி செல்வராஜ் படமாக உருவாக்கி இருப்பதை தெரிந்துக்கொண்டேன், என்றும் கூறியிருக்கிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





