வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில், மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் மாநாடு. சிலம்பரசனுக்கு கம் பேக் கொடுத்த திரைப்படம், யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு மற்றொரு மைல்கல், தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத திரைக்கதை என மாநாடு திரைப்படத்தின் பெருமைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் கூட்டம் பெரியளவு வருகை தராத சூழலில் தான், மாநாடு திரைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. டைம் லைன் கான்செப்ட்டை மையமாக வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக எடுத்து நம்மை கைதட்ட வைத்திருந்தார் வெங்கட் பிரபு.
மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் எஸ் ஜே சூர்யா. அதற்கு முன்பு பல திரைப்படங்களில் அவர் வில்லனாக மிரட்டி இருந்தாலும், மாநாடு திரைப்படம் அதற்கெல்லாம் ஒரு உச்சம் என்று கூறலாம். தலைவரே தலைவரே என்று அவர் கோபத்துடன் பேசும் வசனங்கள் திரையரங்குகளை திருவிழா கோலமாக்கின.
குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சியில் அவர் நக்கலாக சிரிப்பதும், ஒவ்வொரு முறை தனது படுக்கையில் இருந்து எழும்போது அவர் காட்டும் முகபாவனைகளும் ரசிகர்களை கலகலபூட்டின. எஸ் ஜே சூர்யாவை தவிர வேறு எந்த ஒரு நடிகராலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை செய்து விட முடியாது என்று பலரும் கூறும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.
இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்தில் தான்தான் நடிக்க வேண்டியவன் என்று கூறியிருக்கிறார் அரவிந்த்சாமி. படக்குழுவினர் தன்னிடம் வந்து இந்த கதாபாத்திரத்தை கூறிய போது தனக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், இதற்கான பயிற்சியிலும் தான் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு மாதம் மட்டும் அவகாசம் கேட்ட நிலையில், படக்குழுவினர் உடனடியாக தொடங்க வேண்டும் என்பதால் மாநாடு திரைப்படம் கைநழுவி சென்றதாக அரவிந்த்சாமி கூறியிருக்கிறார். இருப்பினும் தற்போது வரை அந்த திரைப்படத்தை தான் பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரவிந்த்சாமி கார்த்தி நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.





