நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குனர் மடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில்,இயக்குனர் மிஸ்கின் வில்லனாக மிரட்டி இருக்கிறார். யோகி பாபு, சுனில் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தனது வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பயப்படும் கோழை இளைஞரான சத்யா என்னும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதற்கு முந்தைய திரைப்படங்களை விட, மாவீரனில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு முதிர்ச்சி தெரிவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். தவறுகளை தட்டிக் கேட்ட தனது தந்தை, உயிரிழந்ததால் தனக்கும் அப்படி ஆகிவிடுமோ என்று உயிருக்கு பயந்து பிரச்சனைகளை கண்டு ஓடும் கதாபாத்திரத்தில் ரசிகருடன் சுலபமாக கனெக்ட் ஆகி இருந்தார் சிவகார்த்திகேயன்.
அதே சமயம், நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் தோன்றிய நடிகை சரிதா, பிரச்சினைகளை உடனே தட்டி கேட்கும் கதாபாத்திரத்தில் இயல்பை மீறாமல் நடித்து அட்டகாசப் படுத்தினார். இயக்குனர் மிஸ்கினும் அரசியல்வாதியாக நடித்து ரசிகர்களின் மிரள வைத்தார். அவர் தோன்றிய பல காட்சிகள் சவரக்கத்தி திரைப்படத்தை நினைவூட்டினாலும், அது பெரிய உறுத்தலாக தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறினர்.

மாவீரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் தான் என்றாலும், திரைப்படத்திற்கு முழு பலமாகவும் பாலமாகவும் அமைந்தவர் யோகி பாபுதான். தரமில்லாமல் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டடத்தை பேட்ச் ஒர்க் செய்வதற்காக அவர் அடிக்கும் ஒவ்வொரு கவுண்டரும், திரையரங்குகளில் சிரிப்பலை எழுந்தது.
வடநாட்டு தொழிலாளர் போல் நடித்தால்தான் தனக்கு வேலை கிடைக்கும் என்பதற்காக, வாயில் பாக்கு மென்றுவிட்டு பேசாமல் இருப்பதும், ஹிந்தியில் பெயர் எழுத சொல்வதற்கு குமார் என்ற பெயரை தமிழில் எழுதி மேலே கோடு போட்டதையும் அசத்தலான ஐடியா என்று சொல்லி ரசிகர்கள் கைதட்டினர். படத்திற்கு பலமாக விஜய் சேதுபதியின் பின்னணி குரலும் அமைந்தது.
படம் வெளியான சமயத்தில், முதல் பாதி அட்டகாசமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சற்று தொய்வடைவதாகவும் விமர்சித்தனர். ஆனால் இந்தக் கூற்றை பொய்யாக்கும் வகையில் மாவீரன் திரைப்படம் வசூல் சாதனை படைத்து விடுகிறது. வித்தியாசமான கதையால் ரசிகர்களை ஈர்த்த இந்த திரைப்படத்திற்கு, கடந்த இரண்டு வாரமாக கூட்டம் அலைமோதுவதால் உலகமெங்கும் சுமார் 70 கோடி ரூபாயை படம் அள்ளி உள்ளது. மாவீரனுக்கு இன்னும் மவுசு குறையாததால், நிச்சயம் 100 கோடி ரூபாய் வசூல் குவிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





